×

வந்தே பாரத் லாபம் எவ்வளவு தெரியுமா?.. ஆர்டிஐ மனுதாரர் அதிருப்தி

புதுடெல்லி: மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் ஆர்டிஐ மூலம் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 2 ஆண்டுகளில் வந்தே பாரத் ரயில் மூலம் ரயில்வே எவ்வளவு வருவாய் ஈட்டி உள்ளது. வந்தே பாரத்தால் லாபம் அல்லது நஷ்டம் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா?’ என கேள்வி கேட்டிருந்தார்.

இதற்கு ரயில்வே அமைச்சகம் அளித்த பதிலில், ‘இதுவரை வந்தே பாரத் ரயிலில் 2 கோடிக்கும் அதிகமானோர் பயணித்துள்ளனர். 2023-24ம் நிதியாண்டில் வந்தே பாரத் ரயில்கள், பூமியை 310 முறை சுற்றி வரக்கூடிய தூரத்திற்கு பயணித்துள்ளன. ஆனால், ரயில்கள் வாரியாக வருவாய், லாப கணக்குகள் தனியாக பராமரிக்கப்படுவதில்லை’ என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து கூறிய ஆர்டிஐ மனுதாரர் சந்திரசேகர் கவுர், ‘‘2019 பிப்ரவரி 15ம் தேதி பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டதற்குப் பிறகு தற்போது 24 மாநிலங்களில் 102 வந்தே பாரத் ரயில்கள் ஓடுகின்றன. 100க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் வந்தே பாரத்தில் பயணித்தவர்கள் எண்ணிக்கை, அந்த ரயில் பயணித்த தூரத்திற்கு சமமான பூமியில் சுற்றளவு எண்ணிக்கையை எல்லாம் கணக்கிட்டுள்ள ரயில்வே அமைச்சகம் லாபத்தை கணக்கிடாதது ஆச்சரியமாக இருக்கிறது. வந்தே பாரத் நாட்டின் முதல் அதிவேக ரயில் என்பதால் அதன் செயல்பாடு முழுமையாக கவனிக்கப்பட வேண்டியது அவசியம்’’ என கூறி உள்ளார்.

The post வந்தே பாரத் லாபம் எவ்வளவு தெரியுமா?.. ஆர்டிஐ மனுதாரர் அதிருப்தி appeared first on Dinakaran.

Tags : Vande Bharat ,RTI ,New Delhi ,Chandrashekar Kaur ,Madhya Pradesh ,Vande Bharat Rail ,Vande ,RDI ,Dinakaran ,
× RELATED கோடை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை...