×

கால்நடை மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை

திருவாடானை, ஏப்.17: திருவாடானையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவாடானை, சூச்சனி, கல்லூர், ஆதியூர் அச்சங்குடி, அஞ்சுகோட்டை, பெரியகீரமங்கலம், அரசூர்,சேந்தனி, பாரூர், கருமொழி, திணையத்தூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் தங்களது ஆடு,மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளையும், வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணியான நாய்களையும் இங்கு வந்து நோய் வந்தால் சிகிச்சை பெற்று வந்தனர்.

மேலும் காணை, களிச்சல், அம்மை நோய் மற்றும் வெறிநாய் கடித்தல் உள்ளிட்ட நோய்களில் இருந்து பாதுகாக்க தடுப்பூசி செலுத்துவதற்காகவும், ஆடு,மாடுகள் இனப்பெருக்கத்திற்காக சிணை ஊசி போடுவதற்காகவும் தினசரி தங்களது கால்நடைகளை மருத்துமனைக்கு கொண்டு செல்கின்றனர். இந்த கால்நடை மருத்துவமனையில் ஒரு பெண் கால்நடை மருத்துவர் மற்றும் உதவியாளர் என 2க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் கால்நடை மருத்துவமனையைச் சுற்றி சுற்றுச்சுவர் இல்லாததால் அப்பகுதி முழுவதும் இரவு 7 மணிக்கு மேல் மதுப்பிரியர்களின் கூடாரமாக செயல்படுவதாகவும், மேலும் இந்த கால்நடை மருத்துவமனை வளாகத்தில் இரவு நேரங்களில் ஒரு சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதனால் இந்த கால்நடை மருத்துவமனை அருகில் உள்ள சூச்சணி, மகாலிங்கபுரம், கிளவண்டி மற்றும் கோனேரிக்கோட்டை ஆகிய பகுதிகளில் வசிக்கும் பெண்கள் உட்பட முதியவர்கள் இரவு 7 மணிக்கு மேல் மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்காகவும், பிற அத்தியாவசியத் தேவைக்காகவும் திருவாடானைக்கு செல்கின்றனர்.

பின்னர் வீடு திரும்புவதற்காக இந்த கால்நடை மருத்துவமனை வழியாக செல்லும்போது ஒருவித அச்சத்துடன் செல்வதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆகையால் இந்த கால்நடை மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் கட்டித்தந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கால்நடை மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Suchani ,Kallur ,Adiyur Achangudi ,Anjukottai ,Periyakeeramangalam ,Arasur ,Senthani ,Barur ,Karumozhi ,Thaniyathur ,
× RELATED திருவாடானை அரசு கல்லூரியில் இரண்டாம் கட்ட பயிற்சி முகாம்