×

11, 12ம் வகுப்பு தேர்வு முடிந்தது ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

 

ஊட்டி, மார்ச் 29: ஆண்டுதோறும் கோடை காலமான மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சமவெளிப் பகுதிகளில் வெயில் சுட்டெரிப்பது வழக்கம். அதே சமயம் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கும் நிலையில், ஊட்டியின் குளிர்ச்சியை அனுபவிக்க மற்ற மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். தற்போது சமவெளிப் பகுதியில் வெயில் வாட்டி வருவதால் முன்னதாகவே ஊட்டியை முற்றுகையிட துவங்கியுள்ளனர். இம்மாதம் துவக்கம் முதலே ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை உயர்ந்தது.

எனினும், 12 மற்றும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்துக் கொண்டிருந்த நிலையில் வார நாட்களில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது. வார விடுமுறை நாட்களில் மட்டும் அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்தனர். இந்நிலையில் 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நிறைவடைந்தது. சிபிஎஸ்இ, பொதுத்தேர்வுகளும் முடிந்த நிலையில் இந்த வாரம் முதல் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், இரு நாட்களில் கோடை சீசன் துவங்குகிறது. எனவே, ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு உயர வாய்ப்புள்ளது.

The post 11, 12ம் வகுப்பு தேர்வு முடிந்தது ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Ooty ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...