×

கடந்த 10 ஆண்டுகள் அழிவு காலம் மோடி அரசை வேரோடு பிடுங்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர்: காங்கிரஸ் தாக்கு

புதுடெல்லி: ‘மோடி அரசில் கடந்த 10 ஆண்டுகள் அமிர்த காலமாக இல்லாமல் அழிவு காலமாக இருந்ததை புள்ளிவிவரங்கள் நிரூபித்துள்ளன. இந்த ஆட்சியை மக்கள் வேரோடு பிடுங்கி எறிய தயாராகி விட்டனர்’’ என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறி உள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது பேட்டியில் கூறியதாவது: பிரதமர் மோடி அமிர்த காலத்தை பற்றி பேசுகிறார். ஆனால் உண்மையில் அவரது ஆட்சி அழிவு காலம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

2023ம் ஆண்டிற்கான தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின் புள்ளிவிவரங்கள், கடந்த ஓராண்டில் நாட்டில் 1.71 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக கூறி உள்ளது. அதாவது தினமும் 500 பேர் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தினமும் 30 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். ஒவ்வொரு மணி நேரமும் 3 இல்லத்தரசிகள் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். மொத்தம் 25,309 இல்லத்தரசிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தற்கொலை செய்பவர்களில் அதிகபட்சமாக 35 சதவீதம் பேர் இளைஞர்கள். 2022ல் மட்டும் 15,783 பேர் வேலையின்மை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தங்கள் எதிர்காலம் இருளில் மூழ்குவதைப் பார்த்து, ஒரே ஆண்டில் 5,588 மாணவிகள் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளனர். பிரதமர் மோடியின் ஆட்சியில் 45 ஆண்டுகால வேலையின்மை சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (சிஎம்ஐஇ) சமீபத்தைய தரவுகளின்படி, இன்று நாட்டில் வேலையின்மை விகிதம் (20-24 வயதுடையோர்) 44.49 சதவீதம் என்ற ஆபத்தான நிலையை தாண்டி உள்ளது. இந்தியாவில் வேலையின்மை விகிதம் 2022ம் ஆண்டில் 23.22% ஆக அதிகரித்துள்ளது. இது அண்டை நாடுகளான பாகிஸ்தான் (11.3%), வங்கதேசம்0 (12.9%) மற்றும் பூடான் (14.4%) ஆகியவற்றை விட அதிகமாகும்.

அரசின் பல்வேறு துறைகளில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. விவசாயிகளின் பயிர்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. பணவீக்கம் மக்களின் வாழ்க்கையை அவலப்படுத்தி உள்ளது. இப்போது இந்த அநீதிக்கு முடிவு நெருங்கிவிட்டது. பாஜ அரசை வேரோடு பிடுங்கி எறிய மக்கள் தயாராகிவிட்டனர். அதன்பிறகு, காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசு 5 நீதி, 25 உத்தரவாதங்கள் மூலம் நாட்டையும், மக்களின் நிலையையும் மாற்றும். இவ்வாறு அவர் கூறினார்.

The post கடந்த 10 ஆண்டுகள் அழிவு காலம் மோடி அரசை வேரோடு பிடுங்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர்: காங்கிரஸ் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Modi government ,Congress ,New Delhi ,General Secretary ,Jairam Ramesh ,Dinakaran ,
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...