×

அடிப்படை வசதிகள் கேட்டு தேர்தலை புறக்கணிக்க முடிவு: அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை

 

பந்தலூர்,மார்ச்26: பந்தலூர் நத்தம் பகுதியில் வசித்து வரும் மக்கள் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாததால் வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட பந்தலூர் நத்தம் பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் நடைபாதை,கழிவுநீர் கால்வாய்,குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்காததை கண்டித்தும், அப்பகுதியில் நெல்லியாளம் நகராட்சி மூலம் நடைபெற்று வந்த நடைபாதை, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை அரைகுறையாக செய்து கிடப்பில் போடப்பட்டதை கண்டித்தும் நேற்று அப்பகுதியினர் சிலர் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பு செய்வதாக கருப்பு கொடிகள் கட்டி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, ஆர்ஐ வாசுதேவன்,விஏஒ அசோக்குமார், சர்வேயர் அருணாச்சலம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறி பொது மக்களை சமாதானம் செய்தனர். அதன்பின் கருப்பு கொடிகள் அகற்றப்பட்டது. இச்சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post அடிப்படை வசதிகள் கேட்டு தேர்தலை புறக்கணிக்க முடிவு: அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : Bandalur ,Natham ,Bandalur Natham ,Nellialam ,Nilgiri ,Dinakaran ,
× RELATED பந்தலூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா