×

சட்டவிரோதமாக மாட்டிறைச்சி விற்றதால் ராஜஸ்தானில் 12 வீடுகள் இடிப்பு: கோதுமை, கடுகு பயிர்கள் நாசம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மாட்டிறைச்சி விற்ற குற்றச்சாட்டின் பேரில் 12 வீடுகளை அதிகாரிகள் இடித்துள்ளனர். மேலும் 22 பேர் மீது வழக்குபதியப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் திஜாரா கைர்தல் மாவட்டம் கிஸ்நகர் பாஸ் கிராமத்தில் சட்டவிரோதமாக மாட்டிறைச்சி விற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் 22 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மாட்டிறைச்சி விற்பனையை தடுக்காத 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேற்கண்ட கிராமத்தில் சட்டவிரோதமாக 50 மாடுகள் வெட்டப்பட்டு மாட்டிறைச்சி விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜெய்ப்பூர் போலீஸ் அதிகாரி உமேஷ் தத்தா கூறுகையில், ‘சட்டவிரோத மாட்டிறைச்சி விற்பனை குறித்து புகார் வந்தவுடன், கிஸ்நகர் பாஸ் பகுதியில் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்து மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டது. இந்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காத 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்’ என்றார்.

மேற்கண்ட நடவடிக்கையின் தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் 12 வீடுகளை அதிகாரிகள் குழுவினர் இடித்துள்ளனர். இதனுடன் பல ஏக்கர் கோதுமை மற்றும் கடுகு பயிர்களும் நாசமானது. சம்பந்தப்பட்டவர்களின் வீட்டு மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post சட்டவிரோதமாக மாட்டிறைச்சி விற்றதால் ராஜஸ்தானில் 12 வீடுகள் இடிப்பு: கோதுமை, கடுகு பயிர்கள் நாசம் appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Jaipur ,Kisnagar Pas village ,Tijara Kairthal district, Rajasthan ,Dinakaran ,
× RELATED ஷூவிற்குள் மறைந்திருந்து படமெடுத்து மிரள வைத்த பாம்பு