×

100 சவரன், ரூ.50 லட்சம் பொருட்கள் வாங்கியும் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல்: கணவன் உட்பட 4 பேர் மீது வழக்கு

வேலூர்: வேலூரில் 100 சவரன் நகை, ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கிய நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடப்பட்டது. இதுதொடர்பாக அப்பெண்ணின் கணவன் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வேலூர் சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் ஆதில்(28). இவருக்கும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஆயுஷாஅமீரின்(26) என்பவருக்கும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது 100 சவரன் நகை மற்றும் ரூ.50 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்களை பெண் வீட்டு சார்பில் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆதில் பொறியாளர் எனக்கூறி ஆயுஷாஅமீரினை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு ஆதில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தாராம்.

இதனால் ஆயுஷாஅமீரின் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆதில், ஆயுஷாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் ஆயுஷாஅமீரினுக்கு வரதட்சணையாக அவரது பெற்றோர் கொடுத்த 100 சவரன் நகையை அடமானம் வைத்து ஆதில் வீடு வாங்கினாராம். மேலும் ஆயுஷாவிடம், கூடுதல் வரதட்சணை கேட்டும், தந்தையின் சொத்தில் பங்கு கேட்டு வாங்கி வருமாறு கூறி ஆதில் மற்றும் அவரது பெற்றோர், சகோதரி ஆகியோர் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆயுஷாஅமீரின் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ஆதில், அவரது பெற்றோர், சகோதரி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post 100 சவரன், ரூ.50 லட்சம் பொருட்கள் வாங்கியும் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல்: கணவன் உட்பட 4 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Savaran ,Vellore ,
× RELATED 25 சவரன், பணம் திருட்டு வழக்கில் மர்ம...