×

நாளை ரேஷன் கடை குறைதீர் நாள் கூட்டம்; புகார் தெரிவித்து பயன்பெற கலெக்டர் அழைப்பு

திருவாரூர், டிச. 8: திருவாரூர் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தினை மேம்படுத்திடும் வகையில் பொதுவிநியோகத் திட்ட சிறப்பு பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுவதாக கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருவாரூர் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தினை மேம்படுத்திடும் வகையில் பொதுவிநியோகத் திட்ட சிறப்பு பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நாளை (9ம் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில், திருவாரூர் தாலுகா கீழகொத்தங்குடி கிராமத்தில் திருவாரூர் ஆர்.டி.ஓ தலைமையிலும், நன்னிலம் தாலுகா வடகுடி கிராமத்தில் நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் தலைமையிலும், குடவாசல் தாலுகா 18புதுக்குடி கிராமத்தில் திருவாரூர் சரக துணைப்பதிவாளர் தலைமையிலும் நடைபெறுகிறது.

இதேபோல வலங்கைமான் தாலுகா சோத்தமங்கலம் கிராமத்தில் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் தலைமையிலும், நீடாமங்கலம் தாலுகா எடகீழயூர் கிராமத்தில் திருவாரூர் பொது விநியோக திட்ட துணை பதிவாளர் தலைமையிலும், மன்னார்குடி தாலுகா ஏத்தக்குடி கிராமத்தில் மன்னார்குடி ஆர்.டி.ஓ தலைமையிலும், திருத்துறைப்பூண்டி தாலுகா பூசலாங்குடி கிராமத்தில் மன்னார்குடி சரக துணைப்பதிவாளர் தலைமையிலும், கூத்தாநல்லூர் தாலுகா ஓகைபேரையூர் கிராமத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலும் நடைபெறுகிறது.

மேலும் முத்துப்பேட்டை தாலுகா கீழநம்மங்குறிச்சி கிராமத்தில் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குநர் தலைமையிலும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே தொடர்புடைய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய மற்றும் நகல் குடும்பஅட்டைகோரும் மனுக்கள் மற்றும் கைபேசி எண் மாற்றம் செய்ய மனுஅளித்து பயன்பெறலாம். அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களையும் கோரிக்கை மனுக்களாக அளித்து பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

The post நாளை ரேஷன் கடை குறைதீர் நாள் கூட்டம்; புகார் தெரிவித்து பயன்பெற கலெக்டர் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Ration ,Tiruvarur ,Dinakaran ,
× RELATED கோவில்பட்டி அருகே லோடு ஆட்டோவில் கடத்திய 1250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்