×

ஒரு வாரத்திற்கு பிறகு கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 21 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!!

ராமேஸ்வரம்: புயல் எச்சரிக்கையால் ஒரு வாரத்திற்கு பிறகு கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படையினர் படகுகளுடன் சிறைபிடித்தனர்.வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் இருந்தனர். கடந்த இரண்டு நாட்களாக பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் காற்றின் வேகம் குறைந்து வெயில் அடிக்க தொடங்கியதை தொடர்ந்து ராமேஸ்வரம் மீன்வளத்துறை நிர்வாகம் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி வழங்கியது.

இதையடுத்து ராமேஸ்வரம், புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். 4 விசைப்படகுகளில் சென்ற 21 மீனவர்கள் இலங்கையின் மன்னார் மற்றும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி அவர்கள் அனைவரையும் படகுகளுடன் கைது செய்தனர். இதில் 13 மீனவர்கள் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள். 8 பேர் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேரிடமும் யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனால் அவர்களது குடும்பத்தினர் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மொத்தத்தில் இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை மீனவ மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒன்றிய, மாநில அரசுகள் கைதான மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

The post ஒரு வாரத்திற்கு பிறகு கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 21 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!! appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Navy ,Tamil Nadu ,Rameswaram ,Sri ,Lanka ,
× RELATED இலங்கை கடற்படை சிறைபிடித்த 22 மீனவர்களின் காவல் நீட்டிப்பு