×

மிக்ஜாங் புயல், கனமழை காரணமாக வேளச்சேரியில் பாதிக்கப்பட்டப் பகுதிகளை ஆய்வு செய்து நிவாரணப் பொருள்கள் வழங்கினார் அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: மிக்ஜாங் புயல் காரணமாக, சென்னை வேளச்சேரியில், கனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை ஆய்வு செய்து, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள், நிவாரணப் பொருள்கள் வழங்கினார்கள்.

மிக்ஜாங் புயல் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக கனமழை வெள்ளத்தினால், சென்னை முழுவதும் தத்தளித்து வந்த நிலையில், மிகவும் தாழ்வான பகுதிகளில் ஒன்றான வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் பகுதி முழுவதும், வெள்ளநீர் சூழ்ந்து பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மிக்ஜாங் புயல் ஆந்திரா மாநிலத்தை நோக்கி நகர்ந்து சென்ற நிலையில், கனமழை படிப்படியாக குறைய தொடங்கிது.

முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, இன்று அதிகாலையிலேயே மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள், வேளச்சேரி செக்போஸ்ட் பகுதிக்குச் சென்றடைந்தார்கள். 5 பர்லாங் சந்திப்பு பகுதியில், ஏ.ஆர்.Fuels என்ற எரிபொருள் நிரப்பும் நிலையத்தில், கடும் மழைவெள்ளத்தின் காரணமாக அலுவலகம் மற்றும் எரிபொருள் கன்டெய்னர் புதைப்பட்டு விட்டது. கண்டெய்னரையும் அதில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த இரண்டு பணியாளர்களையும் மீட்க, மோட்டார் வாகனங்கள் மற்றும் இழுவை இயந்திரங்கள் ஆகியவற்றை உடனடியாக வரவழைத்து மீட்புப் பணிகளை முடுக்கி விட்டார்.

தொடர்ந்து, வேளச்சேரி மற்றும் விஜயநகர் பகுதியில் தேங்கியுள்ள, வெள்ளநீரை அகற்றவும், அதில் பாதிக்கப்பட்டுள்ள மக்களையும் மீட்கவும், மீனவர்களிடமிருந்து படகுகளை எடுத்துவர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, படகுகளை உடனடியாக வரவழைத்து, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க நடவடிக்கைகள் மேற்கொண்டார்கள். AGS காலனி, சொக்கலிங்கம் தெரு, ராம் நகர் போன்ற பகுதிகளில், உணவு, பால் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல், மக்கள் அவதியுற்றனர்.

அமைச்சர் அவர்கள் உடனடியாக, ஆவின் நிறுவனத்தை தொடர்புக் கொண்டு, 11 ஆயிரம் பால் பாக்கெட்களை வரவழைத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்தார்கள்.
மேலும், வெள்ளநீர் சூழ்ந்து, பொது மக்கள் வெளியில் வர இயலாத இடங்களில், ஜே.சி.பி. இயந்திரத்தில், பால் பாக்கெட்களை அடுக்கிக் கொண்டு சென்று, அமைச்சர் அவர்களே பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து பால் பாக்கெட்களை வழங்கினார்கள். சுமார் 5000 உணவு பொட்டலங்களை வரவழைத்து, உணவின்றி, தவித்த மக்களுக்கு வழங்கினார்கள்.

மழை வெள்ளத்தினால், பாதிக்கப்படாத திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து, நிவாரணப் பொருட்களை கொண்டுவர உத்தரவிட்டு, இந்த நிவாரணப் பொருட்கள் வந்தவுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்கள். வேளச்சேரி இரயில்வே ஜங்ஷன் பகுதியில், பால் பாக்கெட்டுகளை பொது மக்களுக்கு வழங்கினார்கள்.

இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் பி.சந்திரமோகன், வேளச்சேரி பகுதிப் பொறுப்பாளர் வி.ஆர்.சுப்புலெட்சுமி, நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் இரா.சந்திரசேகர், பொதுப்பணித்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் கே.பி.சத்தியமூர்த்தி, சிறப்பு அலுவலர் இரா.விஸ்வநாத் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post மிக்ஜாங் புயல், கனமழை காரணமாக வேளச்சேரியில் பாதிக்கப்பட்டப் பகுதிகளை ஆய்வு செய்து நிவாரணப் பொருள்கள் வழங்கினார் அமைச்சர் எ.வ.வேலு appeared first on Dinakaran.

Tags : Minister ,Chennai ,Chennai Vellacheri ,Mijang ,Velacheri ,Velu ,
× RELATED பேருந்து கட்டணத்தை உயர்த்த ஆலோசனை என்பது வதந்தியே: அமைச்சர் சிவசங்கர்