×

கோடை சீசனுக்காக அரசு தாவரவியல் பூங்காவில் பாத்திகள் தயார்படுத்தும் பணி தீவிரம்

 

ஊட்டி, டிச. 2: கோடை சீசன் நெருங்கிய நிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடவு பணிகளுக்காக பாத்திகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இருப்பினும் கோடை விடுமுறையான ஏப்ரல் மற்றும் மே மாதம் முதல் சீசனாக அனுசரிக்கப்படுகிறது. அப்போது, தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த மலர் கண்காட்சியின்போது பூங்கா முழுவதிலும் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும்.

அதேபோல், பல்லாயிரம் மலர் தொட்டிகள் தயார் செய்யப்பட்டு மாடங்களிலும், புல் மைதானங்களிலும் அலங்கரித்து வைக்கப்படும். இதனை பூங்காவிற்கு வரும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். முதல் சீசனக்காக டிசம்பர் மாதம் முதல் பூங்காவில் விதைப்பு பணிகள் மற்றும் நடவு பணிகள் மேற்கொள்ளப்படும். 5 மாதங்கள் கழித்து ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பூங்காவில் மலர்கள் பூத்துக் குலுங்கும்.

இதற்காக, தற்போது ஊட்டி தாவரவியல் பூங்காவில் விதைகள் சேகரிப்பு பணிகள் முடிந்த நிலையில், தற்போது நடவு பணிகள் துவக்கப்பட உள்ளது. இதற்காக பூங்காவில் உள்ள அனைத்து பாத்திகளும் தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இத்தாலியன் பூங்கா, ஜப்பான் பூங்கா உட்பட பூங்காவின் அனைத்து பகுதிகளிலும் மலர் பாத்திகள் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. இம்மாதம் 15ம் தேதிக்கு மேல் பெரும்பாலான மலர் செடிகள் நடவு செய்யும் பணிகள் துவக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கோடை சீசனுக்காக அரசு தாவரவியல் பூங்காவில் பாத்திகள் தயார்படுத்தும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Government Botanical Garden ,Ooty ,Ooty Botanical Garden ,
× RELATED ஊட்டியில் தாவரவியல் பூங்காவில் பெரிய...