×

திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து சூதாட்டம்: மயிலாடுதுறை அருகே வாட்ஸ்-அப் சூதாட்ட கும்பல் சிக்கியது..போலீசார் அதிரடி நடவடிக்கை..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே வாட்ஸ்-அப் குழு அமைத்து ஊர் ஊராக சென்று சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் கைது செய்யப்பட்டனர். சூதாட்டம் குறித்து மயிலாடுதுறை மாவட்டம் காவல் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்பேரில் குற்றாலம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட அஞ்சார்வாரத்தலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிகளவிலான நபர்கள் இணைந்து சூதாட்டம் நடத்தி வருவது தெரியவந்தது. தொடர்ந்து மயிலாடுதுறை டி.எஸ்.பி. சஞ்சீவ்குமார் தலைமையிலான போலீசார் திருமண மண்டபத்தை சுற்றிவளைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அங்கு திருச்சி, அரியலூர், காரைக்கால், மயிலாடுதுறையைச் சேர்ந்த 20 பேர் சூதாட்டத்தில் பங்கேற்றிருப்பது தெரியவந்தது. உடனடியாக அவர்களை சுற்றிவளைத்து சூதாட்ட கும்பலைச் சேர்ந்த 14 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், குத்தாலம் அருகே அஞ்சார்வாரத்தலை கிராமத்தில் திருமண மண்டபத்தை வாடகைக்கு பிடித்து பணம் வைத்து சூதாட்டம் நடத்தியது தெரியவந்தது.

இந்த கும்பல் வாட்ஸ்-ஆப் குழு அமைத்து ஊர் ஊராக சென்று சூதாட்டம் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சூதாட்ட கும்பலிடம் இருந்து ரூ.5.15 லட்சம் ரொக்கம், 3 கார்கள் மற்றும் 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வாட்ஸ்-ஆப் குழு அமைத்து ஊர் ஊராக சென்று சூதாடிய கும்பல் மயிலாடுதுறையில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து சூதாட்டம்: மயிலாடுதுறை அருகே வாட்ஸ்-அப் சூதாட்ட கும்பல் சிக்கியது..போலீசார் அதிரடி நடவடிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : WhatsApp ,Mayiladuthurai ,Dinakaran ,
× RELATED ‘ஆம்ஸ்ட்ராங்கிற்கு நேர்ந்த கதிதான்...