தஞ்சாவூர், நவ.28: தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து இருந்து 2,500 டன் அரிசி பொது விநியோகத் திட்டத்திற்காக நேற்று கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சாவூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல்லை விவசாயிகளிடமிருந்து அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோகத் திட்டத்தின்கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இது தவிர தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அரவை பணிக்கு அனுப்பப்படும். அதன்படி நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2,500 டன் அரிசி தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் தஞ்சாவூரில் இருந்து கரூர் மற்றும் நாமக்கல்லுக்கு தலா 1,250 டன் அரிசி பொது விநியோகத் திட்டத்திற்காக தலா 21 வேகன்களில் சரக்கு ரயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.
The post கரூர், நாமக்கல்லுக்கு பொதுவிநியோக திட்டத்திற்கு 2,500 டன் அரிசி அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.
