×

ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி : சுற்றுலா பயணிகள் உற்சாகம்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ளதால் பரிசல்களை இயக்க மாவட்ட நிா்வாகம் அனுமதியளித்துள்ளது.கா்நாடகம் மற்றும் தமிழக காவிரிக் கரையோர பகுதிகளில் அண்மையில் பெய்த மழையினால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து காணப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி காவிரி ஆற்றில் பரிசல்களை இயக்க மாவட்ட நிா்வாகம் கடந்த 32 நாள்களாக தடை விதித்து வந்தது.

இந்த நிலையில் கா்நாடகம் மற்றும் தமிழக காவிரிக் கரையோரப் பகுதிகளில் மழையின் அளவு குறைந்துள்ளதால், காவிரி ஆற்றில் நீா்வரத்தும் நொடிக்கு 8 ஆயிரம் கனஅடியாகக் குறைந்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் போரில் மாவட்ட வருவாய் அலுவலா் (சிப்காட்) அழகிரிசாமி, பென்னாகரம் வட்டாட்சியா் சரவணன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் முனிரத்தினம் மற்றும் வருவாய் ஆய்வாளா் சிவன் ஆகியோா் கொண்ட குழுவினா் செவ்வாய்க்கிழமை காவிரி ஆற்றில் பரிசல் இயக்க வாய்ப்புள்ளதா என பரிசலில் சென்று ஆய்வு செய்தனா். இதையடுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் முதல் கட்டமாக கோத்திக்கல் பரிசல் துறையிலிருந்து மணல் மேடு வரை பரிசல்களை இயக்க மாவட்ட நிா்வாகம் அனுமதியளித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

Tags :
× RELATED மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்!