ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானற்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ேம மாதம் கோடை சீசன் போது அவ்வப்போது ஊட்டியில் மழை பெய்தது. இதனால் தாவரவியல் பூங்கா பெரிய புல் மைதானங்கள் அனைத்தும் சேறும் சகதியுமாக மாறியது. புல் மைதானம் பராமரிப்பு பணிக்காக ஜூன் மாதம் முழுவதும் மூடப்பட்டு சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
கடந்த ஒரு மாத காலமாக புல் மைதானத்தில் பாதிக்கப்பட்ட புற்களை அகற்றவிட்டு, புதிய புற்கள் பதிக்கும் பணி துவக்கப்பட்டது. அதேபோல், மரங்களின் அடியில் வண்ண மிகு அழகு தாவரங்கள் நடவு செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. தற்போது சீரமைப்பு பணிகள் முடிந்த நிலையில், சுற்றுலா பயணிகள் செல்ல பெரிய புல் மைதானம் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும், காலை மற்றும் மாலை நேரங்களில் புற்களுக்கு உரமிடும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.