ஊட்டி: நீலகிரியில் பல்வேறு பகுதிகளிலும், சாலையோரங்களிலும் பூத்துள்ள மஞ்சள் நிற சீகை பூக்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு அரிய வகை தாரவங்கள், மரங்கள், ஆர்கிட்டுகள் உள்ளன. இது தவிர இங்குள்ள தாவரவியல் பூங்காக்களில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் காணப்படும் மலர் செடிகள், மூலிகை தாவரங்கள், பெரணி செடிகள் மற்றும் கள்ளிச் செடிகள் ஆகியவை வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
இங்குள்ள வனங்களில் சில சமயங்களில் வனங்களில் ஒரே சமயத்தில் சில மரங்கள் பூத்து குலுங்கும். இந்நிலையில் சாலையோரங்களில் காணப்படும் சீகை மரங்களில் தற்போது மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூத்துள்ளன. பெரும்பாலான பகுதிகளில் அடர் மஞ்சள் நிறத்தில் மரம் முழுக்க இந்த மலர்கள் பூத்துள்ளது. இதனால் அந்த பகுதியே மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கிறது. தற்போது ஊட்டி - குன்னூர் சாலையில் வேலி வியூ பகுதியில் உள்ள சீகை மரங்களில் இந்த பூக்கள் பூத்துள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பது மட்டுமின்றி அதன் அருகே நின்று புகைப்படம் எடுக்கின்றனர்.