×

கோடை விடுமுறை எதிரொலி சுற்றுலா பயணிகளால் களை கட்டிய கொல்லிமலை

சேந்தமங்கலம்: கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளால் கொல்லிமலை களை கட்டி காணப்பட்டது. கொல்லிமலையில் கோடை விடுமுறையையொட்டி, தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகின்றனர். அவர்கள் அறப்பளீஸ்வரர் கோயில், ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, சினி பால்ஸ், எட்டுக்கை அம்மன் கோயில், மாசிலா அருவி, நம்மருவி, வாசலூர்பட்டி படகு இல்லம், சீக்குப்பாறை வியூபாய்ன்ட், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை தங்கள் குடும்பத்துடன் சுற்றி பார்க்கின்றனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொல்லிமலைக்கு வந்திருந்தனர். அவர்கள் பல்வேறு பகுதியை சுற்றிப்பார்த்து விட்டு, வாசலூர்பட்டி படகு இல்லத்தில் குடும்பம் குடும்பமாக படகில் சவாரி செய்து உற்சாகமடைந்தனர். அங்கு குறைந்த அளவிலான படகுகளே உள்ளதால், நீண்டநேரம் காத்திருந்து படகில் சவாரி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பழுதான படகுகளை சீரமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாலை வீடு திரும்பும்பொழுது கொல்லிமலையில் விளையக்கூடிய அன்னாசி, பலா, வாழைப்பழம் உள்ளிட்டவைகளை வாங்கி சென்றனர்.

Tags :
× RELATED மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்!