×

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் நன்றி புதுக்கோட்டை மாவட்ட அளவில் வெற்றி மாநில இலக்கிய மன்ற போட்டிக்கு 2 மாணவர்கள் தேர்வு

புதுக்கோட்டை : புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான இலக்கிய மன்ற போட்டி நேற்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் 2 பேர் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2022-2023ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே கல்வி இணைச் செயல்பாடுகளை ஊக்குவிக்க வெவ்வேறு காலகட்டங்களில் இலக்கியம், கவின் கலை, சூழலியல் உள்ளிட்ட மாணவ மன்றங்கள் தொடங்கப்பட்டு நடைமுறையில் இருந்தன. கொரோனா பெருந்தொற்றால் கடந்த சில ஆண்டுகளாக இம்மன்றங்கள் செயல்படாத நிலையில் அவற்றைப் புதுப்பித்து சிறப்பாக செயல்பட வழிவகை செய்யப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.

அதன்படி 2022- 2023ம் கல்வி ஆண்டில் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் மன்ற செயல்பாடுகளில் 6-ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கில் இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம், சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் மற்றும் வானவில் மன்றம் போன்றவற்றை ஒவ்வொரு பள்ளியிலும் நிறுவி ஒவ்வொரு மாதமும் நிகழ்ச்சிகளும் போட்டிகளும் நடத்த வேண்டும்  என தெரிவிக்கப்பட்டு இருந்தது. மாவட்ட அளவில் நடைபெறும் சிறார் திரைப்படம், இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம் மற்றும் வானவில் மன்றம் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகள் மற்றும் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் அதில் வெற்றி பெறுபவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பினை பெறுவார்கள்.  அந்த முறையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகளை பின்பற்றி மார்ச் மாதத்திற்கான புதுக்கோட்டை மாவட்ட அளவிலான இலக்கிய மன்ற போட்டி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன் வழிகாட்டலுடன் புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இப்போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் வட்டார அளவில் தேர்வு செய்யப்பட்ட 2 மாணவர்கள், 2 மாணவிகள் என 4 மாணவ, மாணவியர்கள் வீதம் 13 ஒன்றியங்களில் இருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.  போட்டியினை மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) சுவாமி முத்தழகன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இப்போட்டியில் பெண்மையை போற்றுவோம், தமிழ் எந்தன் உயிருக்கு நேர் ஆகிய கருப்பொருட்களை மையமாக கொண்டு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி நடைபெற்றது. இம்முறையில் நடைபெற்ற பேச்சு போட்டியில் மதியநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியின் மாணவி பிர்த்தீபா, கட்டுரை போட்டியில் திருக்கோகர்ணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் மாணவர் கவுதம் ஆகியோர் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

போட்டியினை முதன்மைக்கல்வி அலுவலக பள்ளித்துணை ஆய்வாளர் வேலுச்சாமி, புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலக பள்ளித்துணை ஆய்வாளர் மாரிமுத்து ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்து நடத்தினர்.  இப்போட்டியில் தேர்வு செய்யப்பட்ட குழுவினர் நடுவர்களாக செயல்பட்டனர்.  இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் விஜய் மாணிக்கம், புதுக்கோட்டை வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) டயானா, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Stalin ,Pudukkotta ,State Literature ,
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...