×

ஆட்டம், பாட்டத்தை கண்டக்டர் கண்டித்ததால் மாநகர பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு: மாணவர்களுக்கு போலீசார் வலை

அம்பத்தூர், செப். 29: பஸ்சில் ஆட்டம் பாட்டம் போட்டு வந்ததை கண்டக்டர் கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் மாநகர பஸ்  மீது கல்வீசி கண்ணாடியை உடைத்தனர். தப்பி ஓடிய மாணவர்களை போலீசார் தேடுகின்றனர். மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஜெ.ஜெ.நகருக்கு (தடம் எண்.48ஏ) மாநகர பஸ் இயக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 4.30 மணி அளவில் மாதவரத்தில் இருந்து ஜெ.ஜெ.நகருக்கு மாநகர பஸ் புறப்பட்டது. டிரைவர் சாய்பாலாஜி (44) பஸ்சை ஓட்டிச் சென்றார். அதில், பயணிகள், மாணவர்கள் என 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். வில்லிவாக்கம் அருகே வந்தபோது, மாணவர்களில் சிலர் பாட்டு பாடி ஆட்டம் போட்டனர்.

மாணவர்களின் இந்த செயலால் பேருந்தில் இருந்த பயணிகளுக்கும், கண்டக்டர், டிரைவர்களுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால் மாணவர்களை கண்டக்டர் கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த மாணவர்கள், கண்டக்டரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் சில மாணவர்கள் பஸ்சில் இருந்து ஏறுவதும் இறங்குவதுமாக இருந்துள்ளனர்.
அப்போது, பஸ்சை விட்டு கீழே இறங்கிய ஒரு மாணவன், கீழே கிடந்த கல்லை எடுத்து பஸ்சின் பக்கவாட்டு கண்ணாடி மீது வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் கண்ணாடி உடைந்து சிதறியதால் பயணிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து டிரைவர் சாய்பாலாஜி அளித்த புகாரின்படி, ஐசிஎப் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த மாணவர்களை தேடுகின்றனர்.

Tags :
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...