×

திருவள்ளூர் நகராட்சி சார்பில் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு: 1175 மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி ஆலோசனை

திருவள்ளூர், செப்.24:  திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதால் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், நகராட்சி ஆணையர் க.ராஜலட்சுமியின் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் மாணவ, மாணவிகளுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நேற்று திருவள்ளூரில் உள்ள ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏ.எம்.எஸ்.செல்வி தலைமை தாங்கினார்.  

நகராட்சி சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜி, சுகாதார ஆய்வாளர் சுதர்சனம் ஆகியோர் கல்து கொண்டு டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது எப்படி என்பது குறித்து மாணவிகளிடையே எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும், காய்ச்சல் வந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவர்கள் எழுதி தரும் மருந்து மாத்திரைகளையே உபயோகிக்க வேண்டும். தாங்களாக மருந்தகங்களில் வாங்கி உண்ணக் கூடாது போன்ற ஆலோசனைகளை வழங்கினர்.

அந்த பள்ளியில் பயிலும் 1175 மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் நிலவேம்பு கசாயத்தை வழங்கினர். மேலும், சுத்தமான குடிநீரை பருக வேண்டும், அடிக்கடி கை கழுவ வேண்டும், உடல் நல பாதிப்பு குறித்து பள்ளி நிர்வாகத்திடம் மறைக்காமல் சொல்லி காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Tags : Thiruvallur Municipality ,Government Girls High School ,Nilvavembu ,
× RELATED அரசு பள்ளியில் மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர்