புதுக்கோட்டை, ஆக.11: புதுக்கோட்டை அரசு உயர் துவக்கப் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லை, மாணவர்களுக்கு தேவையான வகுப்பறை கட்டட வசதி, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்று குற்றம் சாட்டி பள்ளியில் படிக்கும் பெற்றோர்கள் பள்ளி முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் அரசு உயர் துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் பெற்றோர்கள் முயற்சியில் ஸ்மார்ட் கிளாஸ் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டதால் ஏற்கனவே 540 மாணவர்கள் படித்து வந்த இந்த பள்ளியில் பள்ளியின் கல்வி தரத்தை பார்த்து கடந்தாண்டில் 840 பேர் இந்த பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில் இந்த பள்ளியில் மாணவர்களுக்கு தகுந்தார் போல் போதிய ஆசிரியர்கள் இல்லாததாலும் மாணவர்கள் கல்வி பயில போதிய வகுப்பறை கட்டட வசதி கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் நடைபாண்டில் மாணவர்கள் சேர்க்கை சற்று குறைந்து 796 மாணவர்கள் தற்போது கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பள்ளியில் போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் பள்ளி மாணவர்களுக்கு தகுந்தார் போல் வகுப்பறை கட்டட வசதியை மேம்படுத்த வேண்டும் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கூறி பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் பலமுறை சம்பந்தப்பட்ட கல்வித்துறைக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார் தெரிவித்தும் இதனால் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி நேற்று பள்ளியின் முன்பு மாணவர்களின் பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர். இது குறித்து அந்த பகுதி கவுன்சிலர் செந்தாமரை பாலு கூறியதாவது : இந்த பள்ளிக்கு தேவையான கட்டிட வசதிகள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். அனைத்து வசதிகளும் மாணவர்களுக்கு கிடைக்க தகுந்த முயற்சிகள் செய்து வருகிறோம் என்றார்.