உடுமலை, ஆக. 9: உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் நல்லாறு பாய்கிறது. திருமூர்த்திமலையில் இருந்து வரும் பாலாறு, திருமூர்த்தி அணையில் கலக்கிறது. காண்டூர் கால்வாயில் தண்ணீர் வரும்போது, நல்லாறு ஷட்டர் திறக்கப்பட்டு, நல்லாற்றில் தண்ணீர் திறப்பது வழக்கம். நல்லாறு பகுதியில் வட்டக்கிணறுகள் உள்ளன. இதன்மூலம் அர்த்தநாரிபாளையம், கம்பாலபட்டி ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக நல்லாற்றில் குறைந்தளவே தண்ணீர் இருந்தது. தற்போது பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக நல்லாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து பாய்கிறது.இதனால் வட்டக்கிணறுகள் நிரம்பியுள்ளதால், ஊராட்சிகளுக்கு தங்குதடையின்றி குடிநீர் கிடைக்கும். மேலும், நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்பதால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.