×

அரசு மருத்துவமனைகளிலும் தட்டுப்பாடு நீடிப்பு குமரியில் கொரோனா தடுப்பூசி மையங்கள் மூடல் நிலைமையை சமாளிக்க என்ன வழி? கலெக்டர் பேட்டி

நாகர்கோவில், ஏப்.17: குமரியில் கொரோனா தடுப்பூசி மருந்து இல்லாததால் ஊசி போடும் மையங்கள் மூடப்பட்டது. இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பத்மநாபபுரம் அரசு மருத்துவமனை, குழித்துறை அரசு மருத்துவமனை, செண்பகராமன்புதூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் தான் முதலில் கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தொடக்கத்தில் நாள் ஒன்றுக்கு 100 பேர், 150 பேர் தான் தடுப்பூசி போட்டு வந்தனர். பின்னர் 25க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளுக்கும் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இதையடுத்து  தடுப்பூசி போடுகிறவர்களின் எண்ணிக்கை மெல்ல, மெல்ல அதிகரித்தது.

தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் பணியில் உள்ள வருவாய்த்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினரும் தடுப்பூசி போட வேண்டும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தடுப்பூசி போடும் பணி வேகமெடுத்தது.
 இந்த நிலையில்  கடந்த 10 நாட்களாக கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் கொத்து கொத்தாக அதிகரித்து வருவதால், தடுப்பூசி போடுகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தடுப்பூசி மையங்களில் காலையிலேயே நீண்ட வரிசையில் மக்கள் திரள்கிறார்கள். 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் தடுப்பூசி என அறிவிக்கப்பட்டாலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்களும் அதிகளவில் குவிந்து வருகிறார்கள்.
 போக்குவரத்து கழகங்கள், மின் வாரியம் உள்ளிட்ட அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 4000 பேர் தடுப்பூசி போடுகிறார்கள். இதனால் இருப்பில் இருந்த தடுப்பூசிகள் குறைந்து விட்டன. ஒவ்வொரு மையத்தில் ஒரு நாளைக்கு 100, 200 பேருக்கு மேல் தடுப்பூசி போட முடிய வில்லை. ஆரம்ப சுகாதார நிலையங்களில் 50 பேருக்கு தான் தடுப்பூசி போடுகிறார்கள். மற்றவர்களை திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.

மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,  அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அம்மா மினி கிளினிக்குகள் என மாவட்டம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்தை தாண்டி விட்டது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கூட்டம், கூட்டமாக தடுப்பூசி மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளனர். ஆனால் தற்போது மாவட்டத்தின் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கோவி ஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று முன் தினம் தடுப்பூசி போடுவதற்கு மக்கள் அதிகளவு வந்திருந்தனர். டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது.  இந்த நிலையில் நேற்றும் தடுப்பூசி போட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மக்கள் திரண்டனர். கோவாக்சின் தீர்ந்ததால், அந்த மையம் மூடப்பட்டது. கோவி ஷீல்டு தடுப்பூசி போடும் பணி நடந்தது. 200 தடுப்பூசிகள் மட்டுமே இருந்ததால், டோக்கன் கொடுக்கப்பட்டது. டோக்கன் பெறாதவர்களை திருப்பி அனுப்பினர். மதியம் வரை பொதுமக்கள் வந்த வண்ணம் இருந்தனர். அவர்களிடம் தடுப்பூசி  இல்லை. திங்கட்கிழமைக்கு பின், வாருங்கள் என கூறி அனுப்பி வைத்தனர்.

நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தடுப்பூசி இல்லை. ஏராளமானவர்கள் தடுப்பூசி போட வந்து ஏமாற்றத்துடன் சென்றனர். மதியம்  12 மணிக்கே பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடும் அறையை மூடி விட்டனர். இதற்கிடையே முதற்கட்ட தடுப்பூசி போட்டவர்கள் 28 வது நாள் வர வேண்டும் என அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கும் தடுப்பூசி இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே நிலைமையை எப்படி சமாளிக்க முடியும் என அதிகாரிகள் திணறி வருகிறார்கள். ஆனால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் ரூ.250க்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதனால் பலர் தனியார் மருத்துவமனைகளில் குவிந்து வருகிறார்கள். தடுப்பூசி இல்லாத நிலை மாவட்டத்தில் பதற்றமான நிலையை ஏற்படுத்தி உள்ளது. கலெக்டர், தமிழக அரசிடம் பேசி நிலைமையை சமாளிக்க கூடுதல் தடுப்பூசிகளை பெற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் கேட்ட போது,  மாநில சுகாதாரத்துறை மூலம் தடுப்பூசி மருந்துகள் நமது மாவட்டத்துக்கு வந்து கொண்டு இருக்கின்றன. திடீரென தடுப்பூசி போடுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு நாளைக்கு 4000 பேர் வரை போடுகிறார்கள். எல்லா மையங்களிலும் தடுப்பூசி இருப்பு வைக்கப்பட்டு, செலுத்தப்படுகிறது. தேவைப்பட்டால் அருகில் உள்ள நெல்லை மாவட்டத்தில் இருந்து வாங்கி கொள்கிறோம். கூடுதல் தடுப்பூசிகள் கேட்கப்பட்டுள்ளன. நிலைமை இன்னும் சில தினங்களில் சரியாகி விடும். எனவே மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றார். 2 லட்சம் டோஸ் வருகிறது சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் இது குறித்து கேட்ட போது , குமரி மாவட்டத்துக்கு 2 லட்சம் டோஸ்கள் கேட்கப்பட்டு உள்ளன. இன்னும் சில தினங்களில் இவை குமரி மாவட்டத்துக்கு வரும்.  எனவே மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை என்றனர்.

Tags : Kumari ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...