×

பண்ருட்டி அருகே தூய்மை பணியாளர் வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது

கடலூர்: பண்ருட்டி அருகே தூய்மை பணியாளர் வீட்டில் 10 சவரன் நகை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருவாமூரில் தனியார் மருத்துவமனை தூய்மை பணியாளர் மகாதேவி வீட்டில் கடந்த 1-ம் தேதி நகை கொள்ளைபோனது. நகை கொள்ளையில் ஈடுபட்ட பிரகாஷ், ஐயப்பன், தினகரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே நடந்த திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் சரகம், திடீர்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் மகாதேவி (46), பண்ருட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார்.

கடந்த ஜூன் 1ஆம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு வழக்கம்போல் பணிக்கு சென்றார். இரவு வீடு திரும்பியவர், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதுதொடர்பாக மகாதேவி அளித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

களவு நடந்த வீட்டில் விரல் ரேகை நிபுணர்கள் சேகரித்த தடயங்களின் அடிப்படையில் பண்ருட்டி அடுத்த சோமாசிபாளையம் காலனியைச் சேர்ந்த பிரகாஷ் (32), சித்திரைசாவடி கிராமத்தைச் சேர்ந்த தினகரன் (34), நெய்வேலி, வட்டம் 30 பகுதியைச் சேர்ந்த நடராஜன் (35) ஆகிய 3 பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் மகாதேவி வீட்டில் நகை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளனர். இதையடுத்து, அவர்களிடம் இருந்த ரூ.1.50 லட்சம் ரொக்கம் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய ஒரு காரை பறிமுதல் செய்தபின், அவர்களை சிறையில் அடைத்தனர்.

 

 

 

 

Tags : Panruti ,Cuddalore ,Mahadevi ,Thiruvamur ,
× RELATED எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி...