புதுடெல்லி: தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்ற குழுவின் முன் கூகுள், மெட்டா உள்ளிட்ட சமூக ஊடகத் தளங்களின் பிரதிநிதிகள் ஆஜரானார்கள். பிரதமர் மோடியின் முகநூல் பதிவில் இந்தியாவின் இளைஞர்களிடம் உரையாற்றிய பிரதம் காகிதக் கசிவுகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து இருந்தார். பிரதமரின் இந்த பதிவு சிறிது நேரம் முடக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு காரணம் ஒரு தொழில்நுட்பக்கோளாறு என்று கூறி மன்னிப்புகோரியிருந்தாலும் அந்த விளக்கம் போதுமானதாக இல்லை என்று கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து மெட்டாவின் உலகளாவிய குழுவை ஒன்றிய அரசு அழைத்திருந்தது.
இந்த சம்பவம் நடந்து சில நாட்களே ஆன நிலையில், பாஜ எம்பி நிஷிகாந்த் துபே தலைமையிலான தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் கிருஷ்ணன் பங்கேற்றனர். மேலும் இதில் ஸ்னாப்சாட், கூகுள், எக்ஸ் , மெட்டா மற்றும் யூடியூப் போன்ற சமூக மற்றும் டிஜிட்டல் ஊடகத் தளங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் சமூக ஊடக ஒழுங்குமுறை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜரானார்கள். சமூக மற்றும் டிஜிட்டல் ஊடகத் தளங்கள் மற்றும் அவற்றின் ஒழுங்குமுறை என்ற தலைப்பில் விவாதத்தில் அவர்கள் கலந்துகொண்டனர்.
* ஜுக்கர்பெர்க் மன்னிப்பு கேட்க வேண்டும்
பேஸ்புக்கிலிருந்து பிரதமர் மோடியின் வீடியோ நீக்கப்பட்டது குறித்து மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவர் நிஷிகாந்த் துபே தெரிவித்தார். அதேவேளையில், பொறுப்புக்கூறலை உறுதி செய்த பிறகு அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழுவின் பிற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
