சென்னை: தமிழகத்தில் மதுக்கடைகளை தனியார் மயமாக்கும் முடிவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் உள்ள மொத்தமுள்ள 4,848 மதுக்கடைகளில், நகர்ப்புறங்களில் உள்ள சுமார் 2,500 கடைகளை மட்டும் தனியார் மயமாக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த தகவலை தொடர்ந்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில் அரசு மதுக்கடைகளை தனியாருக்கு தாரை வார்ப்பது என்பது மதுப் புழக்கத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும். மதுக்கடைகளை மூடுவதே முழுமையான தீர்வு .
மதுக்கடைகளை தனியார் மயமாக்க தமிழக அரசு முடிவு செய்திருந்தால் அது மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழக அரசின் இறுதி நோக்கம் படிப்படியாக மதுக்கடைகளை மூடி, முழு மதுவிலக்கை அமல்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, இப்படி தனியார் வசம் ஒப்படைப்பது கூடாது.
அரசு நடத்தும் கடைகளைத் தனியாருக்குத் தாரை வார்த்தால், தமிழ்நாட்டில் மதுவின் புழக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து மது வெள்ளமாகப் பாயும் சூழல் ஏற்படும். தமிழக அரசே மது விற்பனை செய்கிறது என்ற அவமானத்தை போக்க வேண்டும்; மதுக்கடைகளில் கூடுதல் விலை வசூலிக்கப்படுவதை கட்டுப்படுத்த முடியவில்லை என்பன போன்றவைதான் தமிழ்நாடு அரசின் இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவதற்கு ஒப்பானதாகும் என்று சாடியுள்ளார்.
அரசே மது விற்பனை செய்கிறது என்பது மானக்கேடானது. இந்த இழுக்கை போக்குவதற்கான தீர்வு அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்துவதுதானே தவிர மதுக்கடைகளை தனியாரிடம் தாரை வார்ப்பது அல்ல.
கடந்த காலங்களில் (2002-2003க்கு முன்பு) தனியார் மதுக்கடைகள் இருந்தபோது, ஓரிடத்தில் உரிமம் பெற்றுக்கொண்டு சந்து கடைகள் போல பல கிளைகளைத் திறந்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததும், கள்ளச்சாராயப் புழக்கம் அதிகரித்ததும் அரங்கேறியது. தற்போது மீண்டும் அந்த பழைய நடைமுறைக்குச் செல்வது சீர்திருத்தம் அல்ல, அது பெரிய சீர்கேடு.
முதல்வராக விஜய் அவர்கள் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்தே, தமிழ்நாட்டில் மதுக்கடைகளை தனியார் மயமாக்குவதற்கும், வெளி மாநிலங்களில் இருந்து மதுவை கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்கும் ஒரு லாபி தீவிரமாக முயன்று வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. இருப்பினும் தமிழ்நாட்டின் ஒற்றை அதிகார மையம் நான்தான் என்று முதலமைச்சர் விஜய் அவர்கள் மீண்டும் மீண்டும் கூறி வந்ததால் அப்படி நடக்க வாய்ப்பில்லை என்று மதுவிலக்கு ஆதரவாளர்கள் நம்பினார்கள்.
ஆனால் இப்போது வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. .சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் இன்னும் அதிக அளவில் மதுவுக்கு அடிமையாவார்கள். அப்படியொரு நிலை ஏற்பட அரசே வழிவகுக்கக் கூடாது எனவே தமிழ்நாட்டில் மதுக்கடைகளை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
