×

ஆட்சிக் கட்டிலை காப்பாற்ற தமிழகத்தின் உரிமையை அடகு வைப்பதா? முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

 

சென்னை: தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்கு தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும் – ஆட்சிக் கட்டிலை காப்பாற்ற காங்கிரசுக்கு எதிராக பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதல்வர்.

இந்த பிரச்னையில், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஓரணியில் சென்று ஒன்றிய அரசிடம் மேகதாதுவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென சட்டப்பேரவையில் பேசி இருந்தேன். கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என்ற பயத்தில், இந்த சோபா மாடல் முதல்வர், எதிர்க்கட்சிகள் சொன்னதையும் கேட்கவில்லை- விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை. இனியும் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும். எனவே, மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Udhayanidhi Stalin ,Chief Minister ,Vijay ,Chennai ,Union ,Minister of State ,Karnataka ,Mekedatu Dam ,Cauvery ,
× RELATED பொள்ளாச்சி சிடிசி மேடு பகுதியில்...