புதுடெல்லி: டெல்லியில் நவீன காலத் தாய்மை என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். அப்போது பேசிய மோகன் பக்வத், ‘‘குழந்தைகள் பெரும்பாலும் இந்து தெய்வங்கள் குறித்த கேள்விகளுடன் வருகிறார்கள். ஆனால் பெற்றோர்களால் பல நேரங்களில் அவற்றுக்கு பதிலளிக்க முடிவதில்லை. குழந்தைகள் பெரும்பாலும் பதில்கள் தேவைப்படும் கேள்விகளுடன் வருகிறார்கள். இந்த கடவுளுக்கு ஏன் குரங்கு முகம் உள்ளது? இந்த கடவுளுக்கு ஏன் யானை முகம் உள்ளது? என்பது போன்ற கேள்விகளை கேட்கிறார்கள்.
ஆனால் பெரும்பாலும் பெற்றோருக்கு அதற்கான பதில்கள் தெரிவதில்லை. இவை ஆரம்பத்தில் இருந்தே பாடப்புத்தகங்களில் இருக்க வேண்டும். அவை எளிதில் கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டும். நாம் குழந்தைகளுக்கு எதை கற்றுக்கொடுகிறோமோ அந்த அறிவையே அவர்கள் பெறுகிறார்கள். முதல் 12 ஆண்டுகளில் அவர்களின் வளர்ப்பு நம் கைகளில் தான் உள்ளது. நாம் அவர்களுக்குத் தகவல்களை தெரிவிக்க வேண்டும். அதற்காக நாமும் கற்றுக்கொள்ள வேண்டும். கட்டளையிடுவதை விட கலந்துரையாடலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் ” என்றார்.
* அனைத்து பொறுப்புகளையும் பெண்கள் மீது சுமத்தக்கூடாது
ஆர்எஸ்எஸ் தலைவர் பேசும்போது, பெண்கள் திறமையானவர்கள் என்பதற்காகவே அனைத்துப் பொறுப்புகளையும் அவர்கள் மீது சுமத்தக்கூடாது. குடும்பப் பொறுப்புகள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். ஒரு பெண்ணின் சொந்த லட்சியங்களும் விருப்பங்களும் நசுக்கப்படாமலோ அல்லது அழிந்துபோகாமலோ இருப்பதை குடும்பங்கள் உறுதி செய்ய வேண்டும்” என்றார்.
