×

ஆணவத்தில் எத்தனை கைதுகளை செய்தாலும் திமுகவினர் ஒருபோதும் அஞ்சமாட்டோம்: உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை

 

சென்னை: ஆணவத்தில் எத்தனை கைதுகளை செய்தாலும் திமுகவினர் ஒருபோதும் அஞ்சமாட்டோம் என்று உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார். தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை, பொதுக்கூட்டத்தில் முதல்வரை விமர்சித்துப் பேசினார் என்று கைது செய்துள்ள சோபா மாடல் அரசை வன்மையாக கண்டிக்கிறேன். தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு, ஒரே நாளில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை கைது செய்து இருக்கிறார்.

பொதுக்கூட்டத்தில் பேசினார் என்பதற்காக, மக்கள் பிரதிநிதி என்றும் பார்க்காமல், காலை 6 மணிக்கே காவல்துறையை வீட்டுக்கு அனுப்பி கைது செய்து, விசாரணை என்ற பெயரில் எஸ்பி அலுவலகத்தில் அடைத்து வைப்பது உட்சபட்ச அடக்குமுறை. இதே தூத்துக்குடி மாவட்டத்தில், கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணாலேயே குற்றஞ்சாட்டப்பட்ட த.வெ.க எம்எல்ஏ, கைது ஏதும் செய்யப்படாமல் லாரி டயர்களை ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்.

இந்த சூழலில் திமுக சட்டமன்ற உறுப்பினரை மட்டும் குறி வைத்து காவல்துறை கைது செய்கிறது. எதிர்க்கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்தினால் அங்கே அரசிற்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் எதிர்பார்ப்பது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது. ஆளும் அரசின் சரி, தவறுகளை சுட்டிக்காட்டுகின்ற-விமர்சிக்கின்ற மாபெரும் ஜனநாயகக் கடமை எதிர்க்கட்சிக்கு இருக்கிறது. இது புரியாமல், பேசினாலே கைது என்று தொடரும் இந்த அரசின் அராஜகத்தை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆணவத்தில் இதுபோல் எத்தனை கைதுகளை செய்தாலும் திமுக உடன்பிறப்புகள் ஒருபோதும் அஞ்சமாட்டோம். மக்கள் மன்றத்திலும் – நீதிமன்றத்திலும் இந்த ஆட்சியாளர்கள் பின்னடைவை சந்திக்கப்போவது உறுதி.
இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : DMK ,Udhayanidhi Stalin ,Chennai ,Tamil ,Nadu ,Vilathikulam ,MLA ,Markandeyan ,Chief Minister ,
× RELATED 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி...