×

ப்ளூடூத் ஹெட்செட்டை பயன்படுத்திய தகராறில் ஓட்டல் ஊழியரை அடித்து கொன்ற பிரியாணி மாஸ்டர்

 

தாம்பரம், ஜூலை 18: தாம்பரம் அடுத்த சேலையூர், வேளச்சேரி பிரதான சாலையில் நிக்காஹ் பிரியாணி என்ற கடை உள்ளது. இந்த கடையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த இர்பான் (22) என்பவர் பிரியாணி மாஸ்டராக வேலை செய்து வந்தார். அதே மாநிலத்தை சேர்ந்த தர்மேந்திரா (21) என்பவர் சப்ளையராக வேலை செய்து வந்தார். கடையில் வேலை செய்யும் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கடையின் பின்பகுதியில் இருக்கும் அறையில் தங்கி இருந்தனர். இந்நிலையில் இர்பானின் செல்போன் ப்ளூடூத் ஹெட்செட்டை தர்மேந்திரா எடுத்து பயன்படுத்தி வந்துள்ளார். அதனை திருப்பி கொடுக்கும்போது ப்ளூடூத் ஹெட்செட் வேலை செய்யாததால் தனக்கு புதிதாக ப்ளூடூத் ஹெட்செட் வாங்கி தரும்படி தர்மேந்திராவை, இர்பான் கேட்டுள்ளார்.

அப்போது ஏற்பட்ட தகராறில் இர்பானை கன்னத்தில் தர்மேந்திரா அடித்துள்ளார். பின்னர் வேலை முடிந்து அறைக்கு ஓய்வெடுக்க சென்ற தர்மேந்திராவை, எப்படி என்னை அடிக்கலாம் என கேட்டு இர்பான் தகராறு செய்துள்ளார். கடையின் உரிமையாளர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பினார். அறையில் தூங்கிக் கொண்டிருந்த தர்மேந்திராவை கட்டையால் தலையில் அடித்து கொலை செய்துவிட்டு இர்பான் தப்பினார்.தகவலறிந்த சேலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தர்மேந்திரா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்துவிட்டு, சொந்த ஊர் தப்ப முயன்ற இர்பானை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்து சேலையூர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

Tags : Tambaram ,Nikkah Biryani ,Velachery, Selaiyur ,Irfan ,Bihar ,
× RELATED வங்கியில் தீ விபத்து: ஆவணங்கள், கணினி எரிந்து நாசம்