- அரியலூர்
- அரியலூர் அரசு கலைக் கல்லூரி சாலை பாதுகாப்பு சங்கம்
- தேசிய நலத்திட்டம்
- அரியலூர் அரசு கலைக் கல்லூரி...
அரியலூர், ஜூலை 15: அரியலூர் அரசு கலைக் கல்லூரி சாலை பாதுகாப்பு சங்கம், நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. அரியலூர் அரசு கலைக்கல்லூரி நுழைவு வாயில் முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், கல்லூரி முதல்வர் சித்ரா ஆகியோர் மாணவ, மாணவிகளின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
பேரணியானது, ராஜாஜி நகர், இருசுகுட்டை, செந்துறை சாலை வழியாக சென்று அண்ணாசிலை அருகே நிறைவடைந்தது. அப்போது, சாலை விதிகளை கடைப்பிடிப்பதன் அவசியம், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், போக்குவரத்து விதிகளை மதிப்பது, பாதுகாப்பாக பயணிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு மாணவ, மாணவிகள் முழக்கமிட்டவாறு சென்றனர்.
இந்த பேரணியில், காவல் துணைக்கண்காணிப்பாளர் சாலைராம் சக்திவேல், அரியலூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடேஸ்வரன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அக்கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலரும், சாலை பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளருமான கருணாகரன் செய்திருந்தார்.
