×

காஞ்சிபுரத்தில் இன்று மின்தடை; மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் அவலம்: தனியார் பள்ளிக்கு விடுமுறை

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் மின்தடைகாரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளிக்கு வந்த பல மாணவர்களுக்கு பள்ளி வளாகத்திலும், மரத்தடியிலும் பாடம் நடத்தப்பட்டது. ஆனால், தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வாழ்கின்றனர். இந்த பகுதியில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று பிள்ளையார்பாளையம் பகுதியில் மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் நேற்று அறிவித்திருந்தது. இதுகுறித்து தனியார் பள்ளி நிர்வாகம் சார்பில் இன்று காலை 7 மணியளவில் மாணவர்களின் பெற்றோருக்கு செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் இன்று பிள்ளையார்பாளையம் பகுதியில் முழுவதும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளி இயங்காது. இதை ஈடுசெய்யும் வகையில் வருகிற 11ம் தேதி பள்ளி இயங்கும் என அறிவிக்கப்பட்டது. சில மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்த பிறகுதான் பள்ளி விடுமுறை என்பது தெரியவந்தது. பல பேருக்கு செல்போனில் அனுப்பிய குறுஞ்செய்தி செல்லவில்லை என கூறப்படுகிறது. மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வந்த பெற்றோர் அதிருப்தியடைந்து திரும்பி சென்றனர். பள்ளி விடுமுறை என்பதை பள்ளி நிர்வாகம் இரவே அனுப்பிருக்கலாம். காலதாமதத்தால் எங்களுக்கு தொந்தரவு ஏற்பட்டுள்ளது‌. மொத்தத்தில் தமிழக அரசின் மின்சார தடையால் இதுபோன்ற பாதிப்பு ஏற்படுகிறது. மின்சார பிரச்னைக்கு இந்த அரசு உடனடியாக தீர்வு காணவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனிடைேய, மின்தடை இருந்தபோதிலும் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்திலும், மரத்தடியிலும், வெளியிலும் அமர்த்தப்பட்டு பாடம் நடத்தப்பட்டது. பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளிக்கு வந்திருந்த மாணவ, மாணவிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். எனவே, மாணவ, மாணவிகளின் நலன் கருதி தமிழ்நாடு மின்சார வாரியமும், தவெக அரசும் தடையில்லாத மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kanchipuram ,Pillayarpalayam ,Kanchipuram… ,
× RELATED இந்தியன் வங்கியில் பயங்கர தீ விபத்து: கணினிகள், ஆவணங்கள் எரிந்து சேதம்