×

கிராமங்கள் முழுவதும் தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்: அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு

 

சாயல்குடி, ஜூலை 8: முதுகுளத்தூர் தொகுதியில் உள்ள கிராமங்களில் பிரச்னைகளை சரி செய்து குடிநீர் வழங்க வேண்டும் என குடிநீர் வடிகால் வாரியம் பொறியாளர்கள், யூனியன் அலுவலர்களுக்கு கலெக்டர் சிவ குரு பிரபாகரன் உத்தரவிட்டார். முதுகுளத்தூர் தொகுதியில் உள்ள கமுதி, முதுகுளத்தூர் மற்றும் கடலாடி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் கலெக்டர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு செய்தார். கமுதி அருகே மண்டலமாணிக்கம் பஞ்சாயத்து இடைச்சூரணி கண்மாய் மராமத்து பணிகளை துவக்கி வைத்தார். இதனையடுத்து முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த சிறப்பு பட்டா குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்த பொதுமக்களுக்கு பட்டா சம்மந்தமான சான்றுகளை வழங்கி தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாமினை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து கடலாடி ஒன்றியம், ஓரிவயல் பஞ்சாயத்து சார்பாக நேற்று முன்தினம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், குடிநீர் வேண்டி பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனு சம்மந்தமாக ஓரிவயல் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவிரி கூட்டு குடிநீர் திட்டக் குழாய்கள், நீர்த்தேக்க தொட்டி, கரூர்- ராமநாதபுரம் புதிய கூட்டு குடிநீர் திட்டம், உள்ளூர் நீர் ஆதாரமாக விளங்கக் கூடிய திறந்த வெளி கிணறு ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு கிராம மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது கிராமங்களில் குடி தண்ணீர் தட்டுப்பாடு, தண்ணீர் வராதது குறித்து பொதுமக்கள் யூனியன் பிடிஓக்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர்களிடம் தகவல் அல்லது மனு கொடுத்தால் அலுவலர்கள்,

உதவி பொறியாளர்கள் உடனடியாக சம்மந்தப்பட்ட கிராமத்திற்கு நேரில் ஆய்வு செய்து உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை டேங்கர் மூலம் தண்ணீர் வழங்க தற்காலிக மாற்று நடவடிக்கையாவது எடுத்து கிராமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கமுதி நிகழ்ச்சியில் பிடிஓக்கள் மேகராஜன், சந்திரசேகர், கடலாடி நிகழ்ச்சியில் தாசில்தார் பரமசிவம், பிடிஓ சங்கரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Tags : Sayalgudi ,Sivaguru Prabhakaran ,Water Supply and Drainage Board ,Mudukulathur ,Kamudi ,
× RELATED அழகர் மலையில் குட்டியுடன் கரடி உலா