×

தேசிங்குராஜபுரம் பகுதியில் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கும் சாலை

 

திருந்துறைப்பூண்டி, ஜூலை 8: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தேசிங்குராஜபுரம் பகுதியில் இருந்து முள்ளூர் வரை செல்லக்கூடிய சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகவும் அவதி அடைந்து வந்தனர். இந்த சாலையை சீரமைத்து தரக்கோரி சிபிஎம் கட்சியினர் பாடை கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சாலையை சீரமைத்து தரப்படும் என அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். அதன்பேரில் தற்போது சாலையில் கற்கள் கொட்டி, அரளை மண் போட்டு நிரவி விட்டனர்.

இவ்வாறு மேம்போக்கான பணி செய்து இரண்டு மாதங்களுக்கும் மேலாகியுள்ள நிலையில், தற்போது சாலையில் கப்பி கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த சாலையில் செல்வோரின் வாகனங்களின் டயர்கள் பதம் பார்க்கப்படுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் செல்லும் அவல நிலை நிலவுகிறது. எனவே உடனடியாக சாலையை சீரமைத்து தார் சாலையாக அமைத்து தர வேண்டுமென பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : Desingurajapuram ,Thiruduraipundi ,Mullur ,Thiruvarurapundi ,Thiruvarur district ,
× RELATED வீடு கட்டுவதற்கு ரூ.50,000 மாமூல் கேட்டு தவெக நிர்வாகி மிரட்டல்