×

15 மாநிலங்களில் 12 கோடி பெண்கள் பயன் பெண்களுக்கு மாத உதவித்தொகை வழங்குவதில் மறுஆய்வு அவசியம்: கூடுதல் அம்சங்கள் இடம் பெற வேண்டும்: பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு அறிவிப்பு

புதுடெல்லி: பெண்களுக்கான மாத உதவித்தொகை வழங்கும் திட்டங்கள் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிய மகளிர் உரிமைத்தொகை திட்டம் இன்று நாடு முழுவதும் அனைத்து மாநில அரசுகளாலும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. 2026 நிதியாண்டில் இதுவரை 15-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகச் செலுத்தப்படும் மாதாந்திர அல்லது வருடாந்திரப் பணப் பரிமாற்றத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.

இவற்றின் மொத்தச் செலவு ஆண்டுக்கு சுமார் ரூ. 1.7 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 12 கோடிப் பெண் பயனாளிகளின் வங்கி கணக்கில் இவை சென்றடைகின்றன. இந்த திட்டம் தொடர்பாக பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு ஆய்வு நடத்தியது. அதில் மகளிர் உரிமைத்தொகை மூலம் சமூகத்தில் மிகப்பெரிய பொருளாதார மாற்றம் ஏற்பட்டு இருப்பதும், செலவுகள் குறைந்து, பொருளாதார வளர்ச்சி அதிகரித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. நாடு முழுவதும் நல்ல வளர்ச்சி இருப்பதால் இந்த திட்டத்தில் மாற்றம் அவசியம்.

இந்த கால கட்டத்திற்கு ஏற்ப நிதி ஆதாரத்தை அதிகரித்து வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகளை பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு அறிக்கையாக தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
* மகளிர் உரிமைத்தொகையால் வளர்ச்சிப் பொருளாதாரம் மற்றும் அரசியல் பொருளாதாரம் சார்ந்த சான்றுகளின் ஒருங்கிணைப்பு ஏற்பட்டுள்ளது.
* பெண்களின் கைகளில் நேரடியாக வழங்கப்படும் வருவாய் ஆதரவு என்பது, குடும்ப நலனை மேம்படுத்துவதற்கும், நிதிச் சேவைகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதற்கும் (நிதி உள்ளடக்கம்), பாலின அடிப்படையிலான பொருளாதார விலக்கத்தைக் குறைப்பதற்கும் ஒரு சக்திவாய்ந்த மற்றும் செலவு குறைந்த கருவியாகத் திகழ்கிறது.
* பல்வேறு மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் பெண்களுக்கான நிபந்தனையற்ற பணப் பரிமாற்ற திட்டங்கள், பணவீக்கம் மற்றும் மாறிவரும் குடும்பச் செலவினப் போக்குகளுக்கு ஏற்ப, போதுமானதா என்பதை அவ்வப்போது மறுஆய்வு செய்யப்பட வேண்டும்.
* மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா அரசுகளால் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பயனாளிகளின் சேமிப்பு மற்றும் நுகர்வில் பெரிய மற்றும் பரவலாக சீரான முன்னேற்றங்களை உருவாக்கியுள்ளன.
* பணவீக்கம் மற்றும் மாறிவரும் குடும்பச் செலவினப் போக்குகளுக்கு ஏற்ப, பணப்பரிமாற்றத் தொகைகள் போதுமானதா என்பதை அவ்வப்போது மறுஆய்வு செய்ய வேண்டும்.
* பெண் பயனாளிகளுக்கான மேம்படுத்தப்பட்ட பலன்கள் மற்றும் துணைச் சேவைகளுக்கு நிதியளிக்க, மேம்படுத்தப்பட்ட இலக்கு நிர்ணயத்தின் மூலம் செயல்திறன் மிக்க நிதி ஆதாயங்கள் பெறப்பட வேண்டும்.
* மகாராஷ்டிரா, ஒடிசா மாநிலங்களில் நடத்திய ஆய்வில் பெண் பயனாளிகளின் சேமிப்பு மற்றும் நுகர்வில் பெரிய அளவிலான, புள்ளிவிவர ரீதியாக குறிப்பிடத்தக்க மற்றும் பரவலாக சீரான முன்னேற்றங்களை ஏற்படுத்துகின்றன.
* மாத இறுதியில் கணக்கில் உள்ள இருப்புத் தொகை மகாராஷ்டிராவில் சுமார் 84 சதவீதமும், ஒடிசாவில் 45 சதவீதமும் அதிகரித்துள்ளது; இது ஒரு பயனாளிக்கு முறையே சுமார் ரூ. 6,884 மற்றும் ரூ. 6,887 என்ற அளவிலான கூடுதல் தொகையைக் குறிக்கிறது.
* மாதாந்திர நுகர்வுச் செலவுகள் முறையே 46 சதவீதம் மற்றும் 28 சதவீதம் அதிகரித்துள்ளன; இது நுகர்வுக்கான விளிம்புநிலை விருப்பத்தின் மதிப்பை சுமார் 0.90 ஆகக் காட்டுகிறது.
* விருப்பத்தின் பேரில் திறன் மேம்பாடு, டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் சுயஉதவிக் குழுக்களுடனான இணைப்பு ஆகியவற்றை உள்ளடக்கி இத்திட்டத்தை மாற்றியமைத்துத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
* இத்திட்டங்கள் குடும்ப உறுப்பினர்களின் நிதி நிலையை மேம்படுத்துவதோடு அவர்களின் செலவுகளையும் குறைக்கின்றன.
* பெண்களை இலக்காகக் கொண்ட பணப் பரிமாற்றத் திட்டங்கள், இந்தியாவில் மாநில அளவிலான நலத்திட்டச் செலவினங்களில் மிக வேகமாக வளர்ந்து வரும் பிரிவுகளில் ஒன்றாக மாறியுள்ளன.

* யுபிஐ, ஏடிஎம் பயன்பாடு அதிகரிப்பு
மகளிர் உரிமைத்தொகை போன்ற திட்டங்களால் பெண் பயனாளிகளிடையே வாழ்க்கை முறை சார்ந்த தேவைகள், மருத்துவம் மற்றும் கல்விக்கான செலவுகள் ஆகியவற்றில் ஒரு தரமான மாற்றம் ஏற்பட்டுள்ளதும், அதேவேளையில் யுபிஐ பயன்பாடு அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிராவில் பெண் பயனாளிகளிடையே, ஏடிஎம் மூலம் மேற்கொள்ளப்பட்ட கல்விச் செலவுகள் 18 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாக உயர்ந்து, அதிகபட்ச அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. யுபிஐ பரிவர்த்தனைகளைப் பொறுத்தவரை, வாழ்க்கை முறை சார்ந்த செலவுகள் 37 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்ந்து அதிகபட்ச அதிகரிப்பைக் கண்டன. அதேவேளையில் மருத்துவச் செலவுகள் 8 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக அதிகரித்தன.

Tags : PM's Economic Advisory Group ,New Delhi ,Prime Minister's Economic Advisory Group ,Chief Minister ,M.K. Stalin ,Tamil Nadu ,
× RELATED வயநாடு நிலச்சரிவு குறித்த செய்தியால்...