- வலங்கைமான்
- வுலங்கைமன்
- டெல்டா
- ஆதித்சமங்கலம்
- Chandrasekharapuram
- ரெகுநாதபுரம்
- மருவத்தூர் மேல் வித்தியாழ்
வலங்கைமான். ஜூலை 2: டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி அறுவடைக்கு பிறகு கோடை சாகுபடி ஆக பெரிய அளவில் பருத்தி சாகுபடி செய்யப்படுவது வழக்கம். ஆதிச்சமங்கலம், சந்திரசேகரபுரம், ரெகுநாதபுரம், மருவத்தூர் மேல விடையல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடப்பு ஆண்டில் சுமார் 4 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டது. முன்னதாக பருத்தி விதையினை விவசாயிகள் நெல் தரிசு வயலில் சிறு சிறு பார்த்திகள் அமைத்து விதைத்தனர். மேலும் சில பகுதிகளில் தண்ணீர் விடப்பட்டு சேற்று உழவு செய்து பின்னர் பருத்தி விதை விதைக்கப்பட்டது. பருத்தி விதைத்து செடிகள் நன்கு வளர்ச்சியடைந்த நிலையில் மண்கலர்தல் மண் அணைத்தல் உள்ளிட்ட பணிகளை விவசாயிகள் ஆர்வமுடன் மேற்கொண்டனர்.
தற்போது பருத்தி மகசூல் தொடங்கியுள்ளது இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வலங்கைமான் நீடாமங்கலம் சாலையில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் புதன்கிழமை தேசிய வேளாண் மின்னணு சந்தை மூலம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயலாளர் கண்ணன் உத்தரவின்பேரில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. பருத்தி ஏலத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தியினை கொண்டு வந்தனர். சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 6 வியபாரிகள் கலந்து கொண்டனர்.
பருத்தி அதிகபட்ச விலையாக குவிண்டால் 9 ஆயிரத்து 139 ரூபாய்க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ. 8 ஆயிரத்து 009க்கும் சராசரி விலையாக குவின்டால் ரூ. 8 ஆயிரத்து 652க்கும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில் 213 குவின்டால் பருத்தி ரூ. 18 லட்சத்து 42ஆயிரத்து 444 க்கு ஏலம் போனது. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறும் பருத்தி ஏலத்தில் விவசாயிகள் தங்களது பருத்தியினை நன்கு உலர்த்தி கொண்டுவந்து ஏலத்தில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப் படுகிறது. சரியான எடை மற்றும் நல்ல விலையில் பருத்தியினை இடைத்தரகர்களின்றி விற்பனைசெய்து பயன்பெற ஒழுங்குமுறை விற்பனை கூட மேற் பார்வையாளர் அஜித்குமார், விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
