புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்பாக ஒன்றிய அமைச்சரவை மாற்றம் நிகழும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒன்றிய அமைச்சரவை மாற்றப்பட இருப்பதாக கடந்த சில வாரங்களாக கூறப்பட்டு வருகிறது. அதற்கேற்றார் போல் சில ஒன்றிய இணை அமைச்சர்களுக்கு பாஜவில் முக்கிய நிர்வாக பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சில மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் முடிந்த நிலையில் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை.
இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பாக எப்போது வேண்டுமானாலும் ஒன்றிய அமைச்சரவை மாற்றப்படலாம் என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜூலை 3வது வாரத்தில் தொடங்கப்படும். எனவே, பிரதமர் மோடியின் பணிகளை பொறுத்து, அடுத்த இரு வாரங்களுக்குள் ஒன்றிய அமைச்சரவை மாற்றப்படும் என தெரிகிறது.
இத்துடன் பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் தலைமையிலான புதிய நிர்வாக குழுவும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவையில் சில அமைச்சர்களின் இலாக்கா மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக, நீட், சிபிஎஸ்இ தேர்வு முறைகேடுகள் காரணமாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி பறிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
