திருவனந்தபுரம்: கேரளத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த 4ம் தேதி தொடங்கியது. ஆனால் ஒரு வாரம் மட்டுமே பரவலாக மழை பெய்தது. இதன் பிறகு பருவமழையின் தீவிரம் வெகுவாக குறைந்தது. ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்தது. மழை குறைந்தவுடன் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரித்தது.
இந்நிலையில் நேற்று முதல் கேரளத்தில் பருவமழையின் தீவிரம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. திருவனந்தபுரம் முதல் வடமாவட்டமான காசர்கோடு வரை நேற்று பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் மழை பெய்தது. நாளை முதல் மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
