வலங்கைமான், ஜூன் 26: வெள்ளாடுகளை அதிக எண்ணிக்கையில் வளர்க்க சிறந்த முறை பரண் மேல் வளர்க்கும் முறையாகும். பரண் மேல் ஆடு வளர்ப்பில் ஆடுகள் மரத்தினால் ஆன பரண் போன்ற அமைப்பின் மேல் வளர்க்கப்படுகிறது. பரண் மேல் ஆடு வளர்ப்பு கொட்டகை தரையிலிருந்து உயரமான இடத்தில் குறைந்தது 4-5 அடி உயரத்தில் இருப்பதால் ஆட்டு சாணி மற்றும் சிறுநீர் போன்றவை கீழே சேகரமாகிறது. ஆதலால் தினமும் சுத்தம் செய்யும் பணி மிகவும் குறைவாகவே இருக்கிறது.
பரண் மேல் ஆடு வளர்ப்பு முறையில் வளர்ப்பதால் ஆடுகள் சுகாதரமாகவும் நோய் பரவும் தன்மை குறைவாகவும் இருக்கும். வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமல் கொட்டகையிலே பசுந்தீவனம் மற்றும் அடர்தீவனம் அளிக்கப்படுகிறது. காலநடைகளுக்கு நோய் தடுப்பூசி மற்றும் கோமாரி நோய் தடுப்பூசி கால்நடை மருத்துவர்களை அணுகி தகுந்த நேரத்தில் தடுப்பூசிகளை போட்டு கொள்ளலாம்.
