- கோட்டார் மெர்ச்சன்ட் நார்த் ஸ்ட்ரீட்
- நாகர்கோவில்
- கூல்கேட் சந்தை
- கோட்டார் கம்போளம் சந்திப்பு
- வடசேரி கனகமூலம் சந்தை
- சித்திரா மீன்
- சந்தை
- வணிகர் வடக்கு தெரு
- ராஜா
- சித்திராய்
- திருவனந்தபுரம்...
நாகர்கோவில் : நாகர்கோவிலில் வடசேரி கனகமூலம் சந்தைக்கு அடுத்த படியாக மிகவும் பிரசித்தி பெற்ற காய்கறி சந்தையாக கோட்டாறு கம்போளம் சந்திப்பில் உள்ள கூழக்கடை சந்தை திகழ்ந்தது. இதன் எதிர்புறம் வணிகர் வடக்கு தெருவில் மன்னர் சித்திரைத்திருநாள் நினைவாக சித்திரா மீன்சந்தை உள்ளது.
இங்கிருந்து பிரிந்தவர்களே கணேசபுரம், வடசேரி, ராமன்புதூர் மாமூட்டுசந்தை என நாகர்கோவில் மாநகரின் பல பகுதிகளில் மீன் சந்தைகளை உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
முன்பு சித்திரா மீன் சந்தையில் மீன்வாங்கவும் விற்பனை செய்யவும் கூட்டம் மிகுந்து இருக்கும். 1966ம் ஆண்டு, மீன் சந்தைக்கு வந்த சைக்கிள் இந்த தெருவில் உள்ள சிறுமி மீது மோதிவிட அது இருதரப்பினர் இடையே கடும் மோதலை உருவாக்கி, அதில் ஒரு உயிர் பலி வரை சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, இரு தரப்பினரும், சமாதானமாக பேசி, யாரும் வணிகர் வடக்கு தெருவில் சைக்கிள் மற்றும் பைக்கில் ஒட்டி செல்லாமல், உருட்டியபடிதான் செல்ல வேண்டும் என ஒப்பந்தம் செய்து, வாகனங்கள் செல்லாமல் இருக்க தடை கற்கள் அமைக்கப்பட்டது.
மேலும், தெருவின் முகப்பில், இதுபற்றி அறிவிப்பும் எழுதி வைக்கப்பட்டது. தற்போது, சித்திரா மீன்சந்தைக்கு கூட்டம் வெகுவாக குறைந்து விட்டாலும், தற்போதும் பொதுமக்கள் பைக்கில் சென்றால், அங்குள்ளவர்கள் அனுமதிப்பதில்லை. நகரின் வளர்ச்சிக்கு பின்னர், இந்த பகுதியில் வீடுகள் அதிகரித்து விட்டது.
எனினும், பைக்கில் செல்வோர் மாற்றுப்பாதை வழியாகத்தான் செல்ல வேண்டும். இதுபற்றி, புகார்கள் வந்ததை அடுத்து, ஆணையர் சரவணக்குமார் இந்த தடை கற்களை அகற்றி, தெருவின் முகப்பு பகுதியில் மழைநீர் வடிகாலையும் அகலப்படுத்தினார். ஆனால், சில வாரங்களில் மீண்டும் அந்த பகுதி மக்கள் தடை கற்களை நட்டுவிட்டனர். இதற்கிடையே சரவணக்குமாரும் பணியிட மாறுதாலாகி சென்று விடவே இதனை யாரும் கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் அப்போதைய மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவின் பேரில், உதவி பொறியாளர் (திட்டம்) சந்தோஷ் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் தடை கற்களை அகற்ற சென்றனர். ஆனால், 150க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என திரண்டு வந்து மறியல் செய்ய முயன்றதால், அப்போது தற்காலிகமாக அகற்றும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
இதுபற்றி கலெக்டர் பிரதாப்பிடம் புகார்கள் சென்ற நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டார். இதன்படி, மாவட்ட வருாய் அலுவலர் பூங்கோதை நேற்று முன்தினம், வணிகர் வடக்குத் தெருவில் முழுமையாக களஆய்வு செய்து கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பித்தார்.
இதனையடுத்து, நேற்று காலை மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா உத்தரவின் பேரில், மாநகரமைப்பு அலுவலர் கெபின்ஜாய், உதவி பொறியாளர் (திட்டம்) சந்தோஷ் மற்றும் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ஆறுமுகம், வருவாய் அலுவலர் மந்திரமூர்த்தி ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், தடை கற்களை அகற்றினர். மேலும், குறிப்பிட்ட தெருவில் வாகனங்கள் செல்வதை தடுக்க கூடாது எனவும் அதிகாரிகள் கூறிச் சென்றனர். இதனால், 60 ஆண்டு கால பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
கைது செய்ய முயன்றதும் கலைந்தனர்
தடைகற்களை அதிகாரிகள் அகற்றியபோது, அப்பகுதியை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து சிலரை போலீசார் வேனில் ஏற்றியதும், மறியல் செய்ய முயன்றவர்கள் பின்வாங்கி கலைந்து சென்றனர்.
