*ஆம்புலன்ஸில் சிகிச்சைக்கு வந்த குழந்தை அலைக்கழிப்பு
திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு முன்பு தவெகவினர் போட்டோ சூட் நடத்தி நெரிசல் ஏற்படுத்தியதால், ஆம்புலன்ஸில் அழைத்து வந்த குழந்தையை சிகிச்சைக்கு அழைத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சியை தவெக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதற்காக மருத்துவமனைக்கு 10க்கும் மேற்பட்ட கார்களில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் வந்தனர். இவர்கள் வந்த கார்கள் பிரசவ வார்டுக்கு அருகிலேயே நிறுத்தப்பட்டன. பின்னர் பிரசவ வார்டுக்குள் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் என 50க்கும் மேற்பட்டோர் சென்று ஒரு குழந்தைக்கு மட்டும் மோதிரம் வழங்கினர்.
அப்ேபாது 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக குழந்தை அவசரமாக அழைத்து வரப்பட்டது.பிரசவ வார்டு பகுதியில் தவெகவினர் வந்த கார்கள் மற்றும் தவெகவினர் நின்று கொண்டு போட்டோ சூட் எடுத்து கொண்டிருந்ததால் 108 ஆம்புலன்ஸ் பிரசவ வார்டு நுழைவாயில் அருகே வர முடியாமல் சற்று தொலைவிலேயே நின்றது.
இதனால் மருத்துவமனை வளாகத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து தவெகவினர் அங்கிருந்து கிளம்பி சென்ற பிறகு குழந்தையை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் பிரசவ வார்டுக்கு அருகே வந்தது. பின்னர் ஆம்புலன்சில் இருந்து குழந்தையை சிகிச்சைக்காக பிரசவ வார்டுக்குள் கொண்டு சென்றனர். இச்சம்பவம் அங்கிருந்த நோயாளிகள், அவர்களது உறவினர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
