டெல்லி: நிதி ஆயோக்கின் வர்த்தகக் கண்காணிப்பு காலாண்டு அறிக்கை’யின் (Trade Watch Quarterly report) எட்டாவது பதிப்பை அதன் துணைத் தலைவர் அசோக் குமார் லஹிரி வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேற்கு ஆசிய நெருக்கடியானது, நீடித்த ‘டைபாய்டு’ காய்ச்சல் போல இல்லாமல், ஒரு குறுகிய கால ‘இன்ஃப்ளூயன்ஸா’வாகவே மாறியுள்ளது என்று குறிப்பிட்டார். இந்த போர் நெருக்கடி இந்தியா தனது இறக்குமதி ஆதாரங்கள் மற்றும் ஏற்றுமதி சந்தைகள் இரண்டையும் பல்வகைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தி உள்ளது என்றார்.
சரக்குக் கட்டண உயர்வு மற்றும் விநியோகத்தில் ஏற்பட்ட சில தடங்கல்கள் மூலம், எரிசக்தி விலைகள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் ஆகியவற்றின் வாயிலாகவே முக்கிய தாக்கம் ஏற்பட்டதாக குறிப்பிட்டார். “போர் முடிவுக்கு வந்து அமைதி நிலவும் என்று நம்புகிறேன். எரிசக்தி விலைகள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் ஆகியவற்றில் தாக்கம் இருந்தது. மேலும் போதுமான அளவு பொருட்கள் கிடைக்காததால் சிக்கல் ஏற்பட்டது. இது ஒரு தற்காலிக விநியோகப் பாதிப்பாகவே முடிந்து விட கூடும் என்றே நான் கருதுகிறேன் என்று பேசினார்.
மேலும் எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்க கூடாது, அதாவது, அனைத்துத் தேவைகளுக்கும் ஒரே மூலத்தையோ அல்லது சந்தையையோ சார்ந்திருக்கக்கூடாது என்ற பாடம் கிடைத்துள்ளது. எனவே, நாம் நமது இறக்குமதி மூலங்களையும் ஏற்றுமதிச் சந்தைகளையும் பன்முகப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
