வேளச்சேரி, ஜூன் 23: வேளச்சேரி அடுத்த அரசன் கழனி, காரணை மெயின் சாலையை ஒட்டி உள்ள அரசன் கழனி ஏரியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலம் மிதப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று பெரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார், உடலை கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர் யார்? என விசாரணை நடத்தினர். இதில் அவர் சித்தாலபாக்கம், கன்னி கோயில் தெருவை சேர்ந்த மாசிலாமணி (70) என்பதும், இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், மாசிலாமணி நேற்று காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக அரசன் கழனி ஏரிக்கரை பகுதிக்கு சென்றார். இதையடுத்து அவர் ஏரியில் இறங்கியபோது கால் வழுக்கி தவறி ஏரியில் விழுந்த நிலையில் அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும், வேறு ஏதாவது காரணமா என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
