புதுச்சேரி, ஜூன் 15: புதுச்சேரி லாஸ்பேட்டை அசோக் நகர் பாரதியார் சாலையை சேர்ந்தவர் சித்ரா(62). ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை. இவருக்கு திருமணமாகி சரண்யா என்ற மகள் உள்ளார். தற்போது, சரண்யாவுக்கு 2வது குழந்தை பிறந்து இருப்பதால், சித்ராவின் வீட்டில் இருந்துள்ளார். இதனிடையே, சித்ராவுக்கு உடல்நிலை சரியில்லாததால், திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள தனியார் நிறுவன மூலம் தவளக்குப்பததை சேர்ந்த ஞான சவுந்தர்யா என்பவரை வீட்டு வேலைக்கு வைத்துள்ளார். சரண்யாவின் 4.5 பவுன் தங்க வளையலை அறையில் உள்ள டிரெஸ்சிங் டேபிள் டிராயரில் வைத்திருந்தாராம்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சரண்யாவின் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு கிளம்பியபோது, டிரெஸிங் டேபிள் டிராயரை திறந்தபோது, அதிலிருந்த 4.5 பவுன் நகைகளை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். அவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும்.இது குறித்து சித்ரா, லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதில், வீட்டு வேலைக்கார பெண் ஞானசவுந்தர்யா மீது சந்தேகம் இருப்பதாகவும், சம்பவத்தன்று வீட்டுக்கு அவர் வந்ததாகவும், வெளியாட்கள் யாரும் வீட்டுக்கு வரவில்லை என்றும் கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில் நகைகளை ஞானசவுந்தர்யா திருடியது தெரியவந்ததை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
