விழுப்புரம், ஜூன் 16: விழுப்புரம் அருகே கரடிப்பாக்கத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையினால் கிராம மக்கள், பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கல்வி நிலையங்கள், அரசு பொதுஇடங்கள் மற்றும் நூலகம், அங்கன்வாடி, ரேஷன்கடை அமைந்துள்ள 500 மீட்டர் தொலைவிலேயே டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் குடிமகன்களின் தொல்லையால் நாங்கள் பாதிக்கப்பட்டு வருகிறோம்.
காலி மதுபாட்டில்களை விவசாய நிலங்களிலேயே தூக்கி எறிந்து உடைத்துப்போடுவதால் விவசாயிகளுக்கும், விவசாய நிலத்தில் மேயும் கால்நடைகளுக்கும் கண்ணாடி குத்தி பாதிக்கப்படுகின்றனர். இந்த கடையை மூடக்கோரி நாங்கள் ஏற்கனவே மிகப்பெரிய போராட்டம் நடத்தினோம். அப்போது காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி 20 நாட்கள் காலஅவகாசம் கேட்டனர். ஆனால் தற்போதுவரை மூடவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு எங்கள் கிராம பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
