×

பணியாளர்கள் போராட்ட அறிவிப்பு: வீடு தேடி இனி ரேஷன் பொருள் வராது?

 

சேலம்: தொடர் பணி நெருக்கடியை கண்டித்து வீடு தேடி சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்வதை புறக்கணிக்க பணியாளர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் 34,000க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள 2.28 கோடி குடும்ப அட்டைகள் மூலம், 7.01 கோடி பயனாளிகள் பொருட்களை பெற்று வருகின்றனர். இதனிடையே, தமிழகத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே நேரில் சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அதிகாரிகளின் தொடர் நெருக்கடியை கண்டித்து, அடுத்த மாதம் முதல் தாயுமானவர் திட்ட பணிகளை புறக்கணிக்கப்போவதாக ரேஷன் பணியாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால், ஜூலை மாதத்திற்கான பொருட்கள் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க நிர்வாகி கார்த்திக் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்டங்களை நேரடியாகக் கொண்டு சேர்த்து வரும் ரேஷன் பணியாளர்கள், தற்போது வாழ்வா-சாவா போராட்ட நிலையில் உள்ளனர். பொதுவிநியோக திட்டத்தின் டிஎன்இபிடிஎஸ் செயலியில் `பிரதிநிதி கோரிக்கை’ வசதி ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நேரடியாகக் கடைக்கு வர இயலாத பயனாளிகளுக்கு, இந்த முறையை பயன்படுத்தி, எவ்வித நிதிச்சுமையும் இன்றி ரேஷன் கடைகளிலேயே அனைத்துப் பொருட்களையும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள், மருத்துவ சிகிச்சை மேற்கொள்வோர் என தேவைப்படும் அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்கும் விதமாக எளிதாக வழங்கிட முடியும். அடிப்படையான சிக்கல்களையும், தீர்வுகளையும் நோக்கி துறை அதிகாரிகள் நகராமல், பல இடங்களில் கீழ்நிலை பணியாளர்களை குறி வைத்து நடவடிக்கை எடுப்பேன், பணி நீக்கம் செய்வேன் என்ற மிரட்டல்கள் வருகிறது. பணியாளர்களை பழிவாங்கும் அதிகாரப் போக்கை கைவிட வேண்டும்.

தாயுமானவர் திட்டத்திற்கென தனி பணியாளர்கள் மற்றும் கூடுதல் பி.ஓ.எஸ். கருவிகள் வழங்க வேண்டும். பெண் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மூத்த பணியாளர்களுக்கு இத்திட்டப் பணிகளில் இருந்து சிறப்பு விலக்கு அளிக்க வேண்டும்.
நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து கடைகளுக்குப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் நடைமுறைகள் முழுவதும் சிசிடிவி மூலம் முழுமையாகக் கண்காணிக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, பொருட்களுக்கான பாக்கெட் முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். மாநிலம் முழுவதும் ஒரே வேலை நேரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த கோரிக்கைகளை முழுமையாக ஆராய்ந்து, இம்மாத இறுதிக்குள் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால், ஜூலை மாதத்தில் தாயுமானவர் திட்ட புறக்கணிப்பில் பணியாளர்கள் ஈடுபடுவார்கள். இதனால், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பொருட்கள் விநியோகத்தில் தடை ஏற்படும். இவ்வாறு கார்த்திக் தெரிவித்தார்.

Tags : Salem ,Tamil Nadu ,
× RELATED புற்றுநோய் மருந்து 50% விலை உயர்வு: விலை நிர்ணய ஆணையம் அறிவிப்பு