புதுடெல்லி: தனது தனித்திறன் உரிமைகளைப் பாதுகாக்க ‘கலா ஹிரான்’ திரைப்படத்திற்கு தடை விதிக்கக்கோரி நடிகர் சல்மான் கான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். பாலிவுட்டில் ‘கலா ஹிரான்: தி பேட்டில் ஃபார் லெகசி’ என்ற பெயரில் திரைப்படம் ஒன்று தயாரிப்பு நிலையில் உள்ளது. இந்தத் திரைப்படம் தனது பெயருக்கும், புகழுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும், தனது தனித்திறன் உரிமைகளை மீறுவதாகவும் கூறி பாலிவுட் நடிகர் சல்மான் கான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும், தனது அனுமதியின்றி தனது வாழ்வியலோடு தொடர்புடைய அம்சங்களை பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா தலைமையிலான விடுமுறை கால அமர்வு, இது தொடர்பாக முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி, ‘கலா ஹிரான்’ படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் அவர்களின் விளக்கத்தைப் பெற்ற பிறகு, வரும் 19ம் தேதியன்று அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என நீதிபதி அறிவித்தார்.
