×

உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் மகள் குறித்து அவதூறு: 4 பேர் மீது போலீசார் வழக்கு

 

கான்பூர்: சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் மகள் குறித்து அவதூறு பரப்பிய விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உத்தரபிரதேச முன்னாள் முதல்வரான சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் மூத்த மகள் அதிதி யாதவ் (23). இவர் குறித்து சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாகத் திட்டமிட்ட முறையில் அவதூறு கருத்துக்கள் பரப்பப்பட்டு வந்தன. அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில், ஆட்சேபனைக்குரிய தகவல்களைச் சிலர் பகிர்ந்து வந்தனர்.

இது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளிக்கப்பட்டது. தற்போது இந்த விவகாரத்தில் கான்பூர் மற்றும் பிரதாப்கர் மாவட்ட போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி கான்பூரில் பாரத் படேல், நாகேஸ்வர் சிங் பாகேல், வினோத் யாதவ் ஆகிய 3 பேர் மீதும், பிரதாப்கரில் சீத்லா சுஜன் கவி என்பவர் என மொத்தம் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பாஜக எம்.எல்.ஏ ராஜேஸ்வர் சிங் கூறுகையில், ‘சமாஜ்வாதி கட்சித் தலைவரின் மகள் குறித்து அவதூறு பரப்புவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அரசியலை விட மகள்களின் கண்ணியம் மேலானது. இத்தகைய தவறான செயல்களுக்கு எதிராக சமூகம் ஒன்றுபட வேண்டும்’ என்றார்.

Tags : Uttar Pradesh ,Chief Minister ,Akhilesh ,Kanpur ,Samajwadi Party ,Akhilesh Yadav ,Aditi Yadav ,Akhilesh Yadav… ,
× RELATED இந்தியாவின் புதிய ராணுவத் தளபதியாக...