ஊட்டி, ஜூன் 13: நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. ஊட்டி நகரின் சுற்றுச்சூழல் மற்றும் அழகினை பாதுகாக்கும் நோக்கில் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விளம்பர பலகைகள், பேனர்கள் வைப்பது மற்றும் பொது இடங்களில் போஸ்டர்கள் வைப்பது, ஒட்டுவது தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஊட்டி நகரில் பல இடங்களிலும் நகராட்சிக்கு சொந்தமாக கட்டிடங்கள், சுற்று சுவர்கள், சாலையோர தடுப்பு சுவர்கள், அரசு கட்டிடங்கள், சுவர்கள், தனியார் கட்டிடங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் தனியார் அமைப்புகளால் அனுமதியின்றி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அசுத்தமாக காட்சியளிக்கிறது.
தடை உத்தரவை மீறி நகரின் பல பகுதிகளிலும் நகராட்சிக்கு சொந்தமான சுவர்கள், போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் அசுத்தமாக காட்சியளிக்கின்றன. மார்க்கெட் உள்ளிட்ட சில இடங்களில் நகராட்சி இடங்களை ஆக்கிரமித்து விளம்பர பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஊட்டி மார்க்கெட் மற்றும் நகர பகுதிகளில் அனுமதியின்றி ஒட்டப்பட்ட போஸ்டர்கள், டிஜிட்டல் பிளக்ஸ் பேனர்கள் உள்ளிட்ட அனைத்தையும் நகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். நகராட்சி இடத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த தகவல் பலகைகளையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.
