தூத்துக்குடி: வியட்நாமைச் சேர்ந்த மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான வின்பாஸ்ட், தனது தூத்துக்குடி உற்பத்தி ஆலையில் ரூ. 7,000 கோடி மதிப்பிலான இரண்டாம் கட்டம் விரிவாக்கத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. கடந்த திமுக ஆட்சியின்போது தூத்துக்குடியில் வின்பாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலை தொடங்கப்பட்டது.
இதனையடுத்து தென் தமிழகத்தின் துறைமுகம் நகரமான தூத்துக்குடியில் அமைந்துள்ள வின்பாஸ்ட் ஆலை ஒரு சாதாரண மின்சார கார் தொழிற்சாலையாக இருக்கும் நிலையில், இந்த விரிவாக்க திட்டத்தின் மூலம் இந்த ஆலையை, கார்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் பேருந்துகளைத் தயாரிக்கும் ஒரு பிரம்மாண்ட உற்பத்தி மையமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், இதனை பூர்த்தி செய்யவும், இந்திய அரசின் ‘ஃபேம்-II’ மற்றும் ‘ஆத்மநிர்பர் பாரத்’ (சுயசார்பு இந்தியா) திட்டங்களுக்கு ஏற்பச் செயல்படவும், வின்பாஸ்ட் இந்த இரண்டாம் கட்டம் விரிவாக்கத்தைத் திட்டமிட்டுள்ளது. இந்த விரிவாக்கத்திற்காக சுற்றுச்சூழல் அனுமதிப் பெற சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி, இந்த விரிவாக்கத்தின் மூலம் ஆண்டுக்கு 2 லட்சம் மின்சார கார்கள், 10 லட்சம் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் 2,000 மின்சார பேருந்துகளை உற்பத்தி செய்யும் அளவுக்கு ஒட்டுமொத்த உற்பத்தித் திறன் அதிகரிக்கும்.
வின்பாஸ்ட் நிறுவனம் ஏற்கனவே தூத்துக்குடியில் உள்ள தனது 408 ஏக்கர் உற்பத்தி ஆலையின் முதற்கட்டத்திற்காக சுமார் ரூ. 1,200 கோடியை முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 50,000 மின்சார கார்களை உற்பத்தி செய்யும் திறன் உருவாக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2025ல், நிறுவனம் தனது இந்திய தயாரிப்புகளை கார்களுடன் நிறுத்திக் கொள்ளாமல், மின்சார பேருந்துகள், இ-ஸ்கூட்டர்கள் மற்றும் சார்ஜிங் உள்கட்டமைப்புகளையும் உள்ளடக்கி விரிவாக்கம் செய்யப் போவதாக அறிவித்திருந்தது.
இதனையடுத்து நாட்டில் விற்பனையாகும் பேட்டரி மூலம் இயங்கும் ஒட்டுமொத்த வாகனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை இருசக்கர வாகனங்கள் ஆகும். தமிழகத்தைப் பொறுத்தவரை, வின்பாஸ்ட் நிறுவனத்தின் இந்த விரிவாக்கம், ஒரு முக்கிய மின்சார வாகன உற்பத்தி மையமாக உருவெடுக்க வேண்டும் என்ற மாநிலத்தின் லட்சியத்திற்கு கிடைத்த மற்றொரு அங்கீகாரமாகும் என குறிப்பிடத்தக்கது.
